A.J.Cronin A.K.Ramanujan Amartya Sen Andrea Maria Schenkel Anton Chekhov Arthur Hailey Bill Bryson Deborah Eisenberg dhan gopal mukerji Elizabeth Kostova Gay Neck Geoff Dyer George Orwell Harper Lee Henning Mankell Ian McEwan Jared Diamond Jilly Cooper Jonathan Livingstone Seagull Joseph Heller Kenneth Anderson Kiran Desai mark tully Maugham Michael McCarthy O.Henry okakura kakuzo Orhan Pamuk P.G.Wodehouse PB.ஸ்ரீனிவாஸ் R.K.Narayan Richard Bach Ronald Wilks saggi Stephen King steven weinberg Swami Tejomayananda Upamanyu Chatterjee vikram seth William Sydney porter அ. முத்துலிங்கம் அ.கா.பெருமாள் அகிலன் அசோகமித்திரன் அழகியசிங்கர் அறிஞர் அண்ணா அறுசுவை அரசு நடராஜன் அனார் ஆ. சிதம்பரகுற்றாலம் ஆதவன் ஆர்.கே.நாராயண் ஆர்.ஷண்முகசுந்தரம் ஆஸ்கார் ஒயில்டு இடாலோ கால்வினோ இந்திரா பார்த்தசாரதி இந்துமதி இரா. நாறும்பூநாதன் இரா.நடராசன் இரா.முருகவேள் இரா.முருகன் இலக்கிய வீதி இனியவன் இலவச கொத்தனார் உமா சம்பத் எம் கோபாலகிருஷ்ணன் எம். வி. வெங்கட்ராம் எர்னெஸ்ட் ஹெமிங்வே என்.சொக்கன் என்.ராமதுரை எஸ். ராமகிருஷ்ணன் எஸ்.சந்திரமௌலி ஏ.கே.ராமானுஜன் ஏ.கோபண்ணா ஒல்கா பெரோவ்ஸ்கயா ஃபெயின்மன் க.நா.சு கண்மணி குணசேகரன கரிச்சான் குஞ்சு கலாப்ரியா காப்கா காலபைரவன் கி. ராஜநாராயணன் குமரி எஸ்.நீலகண்டன் குல்தீப் நய்யார் கே நெக் கோபிநாத் கோபுலு சந்திரசேகர சர்மா சமஸ் சல்மான் ரஷ்டி சா. கந்தசாமி சா.பாலுசாமி சாருநிவேதிதா சாலீம் அலி சி.சரவணகார்த்திகேயன் சி.சு.செல்லப்பா சிபி.கே.சாலமன் சு. வேணுகோபால் சுகுமாரன் சுந்தர ராமசாமி சுப்புடு சுவாமி விவேகானந்தர் சுனில் ஜோகி சுஜாதா செல்லம்மா பாரதி செள.ராஜன் சே. இரகுராமன் சோம.வள்ளியப்பன் டாக்டர். சு.முத்து செல்லக்குமார் டாக்டர். பி.எம்.ஹெக்டே டாக்டர்.எல்.மகாதேவன் தமிழ் மகன் தரம்பால் தி. ஜானகிராமன் தி.ஜானகிராமன் தியடோர் பாஸ்கர் து.கணேசன் ந.பிச்சமூர்த்தி நகுலன் நடிகர் சிவகுமார் நமீதா தேவிதயாள் நா.முத்துக்குமார் நாகம்மாள் நாகூர் ரூமி நாஞ்சில் நாடன் ப. சிங்காரம் பல்லவி அய்யர் பவன் வர்மா பவா செல்லதுரை பழ.அதியமான் பழ.கருப்பையா பஷீர் பா.ராகவன் பாம்பே ஜெயஸ்ரீ பாரதியார் பாலகுமாரன் பாலச்சந்திரன் சுள்ளிக்காடு பாலு மகேந்திரா பாவண்ணன் பி.எச்.டேனியல் பி.எம்.சுந்தரம் பி.ஏ.கிருஷ்ணன் பி.வி.ராமஸ்வாமி பிரமிள் பெஞ்சமின் ப்ளாக் பெருமாள் முருகன் பொ.கருணாகரமூர்த்தி மகாகவி பாரதியார் மதன் மருதன் மலர்மன்னன் மனுஷ்யபுத்திரன் மா.கிருஷ்ணன் மார்க்வெஸ் மாஸ்தி மில்லி போலக் முகில் முஹமது யூனுஸ் யதுகிரி அம்மாள் யுவன் சந்திரசேகர் ரகோத்தமன் ரமணி சந்திரன் ரா.கி.ரங்கராஜன் ராஜாஜி லலிதாராம் லா.ச.ரா லிவிங்ஸ்மைல் வித்யா லூசியன் ஸ்ட்ரைக் லெமூர் வ.ரா வண்ணதாசன் வா.மு கோமு வாலி விட்டல் ராவ் விளதீமிர் பகமோலவ் வின்சென்ட் ஷீன் வீயெஸ்வி வுடி ஆலன் வெரியர் எல்வின் வேதவல்லி வைக்கம் முகமது பஷீர் வைணவச் சுடராழி ஆ. எதிராஜன் வைரமுத்து ஜனனி ரமேஷ் ஜான் பான்வில் ஜி.நாகராஜன் ஜிம் கார்பெட் ஜெயகாந்தன் ஜெயமோகன் ஜே. ஹெச். வில்லியம்ஸ் ஜோதிநரசிம்மன் ஷோபா சக்தி ஹென்னிங் மான்கெல்

11 Nov 2012

ஜொனாதன் லிவிங்ஸ்டோன் எனும் கடற்புள்ளு

சிறப்பு பதிவர் : ரா. கிரிதரன்.


நண்பர் பாஸ்கர் ரொம்ப நாட்களாக ஆம்னிபஸ் தளத்தில் நடக்கும் புத்தக விமர்சன முயற்சிகள் பற்றி குறிப்பிட்டு வந்துள்ளார். தினம் ஒரு புத்தகத்தைப் பற்றி எழுதுவது என்பது சாதாரண காரியமல்ல. அதுவும் ஆம்னிபஸ் தளத்தில் எழுதப்படும் பலவகையான புத்தகங்களைப் பார்க்கையில் சமயத்தில் பொறாமைகூட வந்துவிடுகிறது. தினம் சமையலா என முணுமுணுப்பதைக் காட்டிலும் தினம் சாப்பிட வேண்டுமா என கேள்வி கேட்பவர் குறைவு என்பதை நமது ஹோட்டல்களில் கூடும் கூட்டத்தை வைத்தே சொல்லிவிடமுடியும். அது போலத்தான் இந்த தளத்தை நடத்தும் அன்பர்கள் யாரும் சாப்பிட முணுமுணுப்பதில்லை, சமைப்பதில் ரோட்டா போட்டு ஒவ்வொருவர் ஒரு நாள் எனப் பிரித்துக்கொண்டிருப்பதால் பெரும் பாரமாகத் தெரிவதில்லை என்றார். மிக மகிழ்ச்சியான விஷயம்.

இங்கிலாந்துப் பகுதியில் கூடும் பறவைகள் பற்றி முன்னர் வலைப்பதிவில் எழுதியிருந்தேன். How to be a bad birdwatcher எனும் புத்தகத்தைப் படித்தபின் பறவைகளைக் கவனிப்பதில் (எலெக்ட்ரிக் கம்பியைப் பார்ப்பது போல ஏனோ பறவைகளைப் பார்ப்பது என எழுதமுடிவதில்லை) இருக்கும் ஏற்பாடுகள் கொஞ்சம் புரியத் தொடங்கியது. நான் வசிக்கும் ரிக்மேன்ஸ்வொர்த் எனும் கிராமத்தில் தடுக்கி விழுந்தால் Funeral directors எனும் கடைசி பயண ஏற்பாடுகளைச் செய்யும் கடையில்தான் விழ வேண்டும். இப்படிப்பட்ட இடத்தில் பொதுவாக அரசு சவுகரியங்கள் அளவுக்கதிகமாக இருக்கும். வயதானவர்களுக்கென ஷாப்பிங் வண்டிகள், வீட்டையும் தோட்டத்தையும் சுத்தப்படுத்த கவுன்சில் எனப்படும் ஊராட்சி ஒன்றிய ஊழியர்கள் என ராஜ வாழ்க்கை வாழ்பவர்கள். தோட்டத்துக் கழிவுகள், பிளாஸ்டிக் கழிவுகள், அட்டைப்பெட்டிகள் என மண்ணில் மக்கி அழியக்கூடிய பொருட்களையும் இதர கழிவுகளையும் சரியாகப் பிரித்து வைக்க தனித்தனி குப்பைத் தொட்டிகள் உள்ளன. ஒழுங்காக தரம் பிரித்து குப்பை கொட்டவே வாரயிறுதியைச் செலவு செய்கிறார்கள். இப்படியாக இங்கு வசிக்கும் பலருக்கும் பொதுவாகவே இயற்கை பற்றிய அக்கறை அதிகமாக உள்ளது. தனது வீட்டுத் தோட்டத்தில் செர்ரிப் பழங்களைத் தின்ன வரும் பறவைகள் குறைவது போலத் தெரிந்தால் அவசர போலிஸைக் கூப்பிட்டுவிடுவார் என் பக்கத்து வீட்டுப் பாட்டி. RSPB எனும் பறவைகள் பாதுகாப்பு அமைப்பு போலிஸ் வந்ததும் அவரது பதற்றம் குறையும்.

இப்படித்தான் வாழவேண்டும் எனத் தங்களுக்குள் திட்டமிட்ட சட்டகத்துள் வாழும் மனிதர்களுக்கிடையே ஜொனாதன் லிவிங்ஸ்டோன் போன்ற ’கடற்புள்ளு’ (seagull - நன்றி : நாடோடித்தடம், கவிஞர் ராஜ சுந்தரராஜன்) வாழ்ந்தால் எப்படி இருக்கும்? வெளியான முப்பது வருடங்களுக்குப் பின்னும் விற்பனையில் உலக அளவில் சக்கப்போடு போடுவதில் பைபிளுக்குப் பிறகு இந்த புத்தகம்தான் எனச் சொல்லலாம். அந்தளவுக்கு படிக்கும் ஒவ்வொருவரையும் ஒவ்வொரு விதத்தில் இந்த புத்தகம் பாதித்திருக்கிறது.

Who moved my cheese போன்று சுயமுன்னேற்ற புத்தகம், பறவைகள் பற்றிய புத்தகம், ஆன்மிக புத்தகம் என ஒவ்வொருவரும் அவரவர்க்குப் புரிந்த பாணியில் இந்த புத்தகத்தைப் பற்றி விவரிக்கின்றனர். அதுவும் எழுபது பக்கங்களில் பத்து பக்கங்களுக்கு மேல் புகைப்படங்கள் மட்டுமே ஆக்கிரமிக்கின்றன. மீதமுள்ள பக்கங்களைப் படிப்பதற்கு அரை மணிநேரம் கூட ஆகாது. ஆனால் ஒவ்வொரு முறையும் பறவை தரும் ஆச்சர்யம் போல இந்த புத்தகம் தரும் ஆச்சர்யங்கள் எல்லையில்லாதவை. பறத்தல் என்பது சுதந்திரம், லட்சியத் தேடல், புதிய உலகம் எனப் பலவகையான குறியீடுகள் நமது உள்ளத்தில் தோன்றியிருக்கின்றன. இதனால் பறத்தல் பற்றி ஒவ்வொரு முறை படிக்கும்போதும் நமது மனநிலைக்கு ஏற்றவாறு புரிந்துகொள்கிறோம்.

தனக்கு விதிக்கப்பட்ட சட்டத்தை உடைத்துப் பார்க்கத் துடிக்கும் ஒரு கடற்புள்ளுவின் கதைதான் இது. வாழ்தல் என்பதே பலருக்குப் போராட்டம் எனும் நிலையில் வாழ்க்கையை ரசிப்பது கனவு மட்டுமே. மேலும் தனது விதியை நொந்துகொண்டு சராசரிகளோடு சராசரிகளாக வாழ்பவர்களே அனேகம். பிறந்தோம், சுகித்தோம், இறந்தோம் எனும் வழமைகளைக் கேள்வி கேட்டு தன்னுள் இருக்கும் ஆத்மசக்தியை சோதிக்கப் புறப்படும் ஜொனாதன்களுக்காக எழுதப்பட்ட கதை. 

உயர உயரப் பறந்தாலும் ஃபினிக்ஸ் பறவையின் சிறகுகள் சூரியனின் தகிப்பைத் தாங்கிடுமா? புவீஈர்ப்பை எதிர்த்துக்கிளம்பும் துளிரென சரிந்து வீழ்ந்தாலும் மீண்டும் புறப்படத் தயாராக இருப்பதினால் மட்டுமே இன்றும் இந்த ஃபினிக்ஸ் பறவை நமது நினைவில் தங்கியுள்ளது. இன்றும் எல்லையில்லா அந்த தகிப்பை நோக்கி பல ஃபினிக்ஸ் பறவைகள் படையெடுத்தபடிதான் இருக்கின்றன தம் விதி பற்றித் தெரிந்தாலும் - இந்த ஃபினிக்ஸ் பறவை ஒரு தொன்மைமாய் நம் பண்பாட்டின் தவிர்க்க முடியாத அங்கமாகி, பலருக்கும் உத்வேகம் தருவதாக இருக்கிறது. கானுயிர்கள் நமக்கு வெளியே இல்லை - அவற்றை நாம் புரிந்துகொள்ளும்போது, நாம் அவற்றின் இயல்பை உள்வாங்கிக் கொள்கிறோம். நம் உலகில் அந்தக் கானுயிர்களுக்கு இடம் கொடுக்கிறோம், அவற்றை நம் இருப்பின் பகுதியாக ஏற்றுக்கொண்டு புதிய ஆற்றல் பெறுகிறோம். இதையே ஜொனாதன் லிவிங்ஸ்டோன் சீகல் செய்கிறது, கானுயிர்கள் பற்றிய ஒவ்வொரு புத்தகமும் செய்கிறது.

பறத்தலில் வேகத்தையும், இலக்கையும் மட்டும் கருத்தில் கொள்வதில் பயனில்லை. பறத்தலின் இன்பத்தை ஒவ்வொரு நொடியும் அனுபவிக்க வேண்டும். புது வகையில் றெக்கையை உபயோகித்து வேகத்தைக் கூட்டுவது, காற்றில் மிதக்கும்போது சிரமமில்லாமல் திசை மாற்றும் வித்தை, யாருமில்லா கடல்பகுதியில் திளைக்கும் விசேஷ மீன்களின் ருசி என ஜொனாதன் லிவிங்ஸ்டோன் வாழ்க்கையை அனுபவித்துக்கொண்டிருக்கிறது. இலக்கை நோக்கி முன்முடிவும் எதிர்பார்ப்பும் இல்லாமல் பயணப்படும் எவரும் தனிமைப்படுத்தப்படுவது உறுதி. அதேபோல ஜொனாதனை சக கடல்புள்ளு கூட்டம் ஒதுக்கிவிடுகிறது. ஆனால் அது தனியாக இல்லை. இப்படி காலகாலமாக தனிமைப்படுத்தப்பட்டு பறத்தலே இன்பம் என அடுத்த கட்டத்துக்கு நகர்ந்த கடல்புள்ளுகளின் கூட்டத்தில் சேர்ந்துவிடுகிறது.

சராசரி கடல்புள்ளுவின் வாழ்விலிருந்து விலகியதில் தனது இருப்புக்கு தனி அர்த்தம் வந்துவிட்டதாக அது நினைக்கிறது. பறப்பதின் இன்பத்தை உணராத தனது நண்பர்களை நினைத்து மிகவும் வருந்துகிறது. ஆனால் சேர்ந்த புது இடத்தில் பல புது விஷயங்களைக் கற்றுக்கொள்கிறது. பறத்தலின் இன்பம் மட்டுமல்ல, கச்சிதமாகப் பறப்பதில்தான் பறவை வாழ்வின் சூட்சுமம் அடங்கியுள்ளது என்பது புரியவருகிறது. மூத்த கடல்புள்ளு ஒரு இடத்தில், ‘கச்சிதமாகப் பறக்கக் கற்றுக்கொண்டால், உனது மூக்கு நுனியிலிருந்து றெக்கை நுனி வரை பறத்தலை மட்டுமே உணர்வாய். உடம்பு எனும் தளையை உதறித் தள்ளிவிடு. அதற்குப் பிறகு பறத்தல் மட்டுமே இருக்கும்’ என்று சொல்கிறது.

இப்படி முழுமையான பறத்தல் அனுபவமே பறவை என ஜொனாதன் உணர்ந்துகொள்கிறது. ஆன்மிக புத்தகமாகப் படிக்கும் வாசகர்கள் மிக பெரிய மனவெழுச்சியை இக்கட்டத்தில் அடைந்ததாகக் குறிப்பிடுகிறார்கள். பொதுவாக ஒரு செயலைத் தீவிரமாகச் செய்யும்போது அந்த செயலாகவே மாறிவிடுவோம், மலை போன்ற ஏனைய சிக்கல்கள் அனைத்தும் எறும்பு போல சிறியதாகத் தெரியும் என்பது உச்சகட்ட ஆன்மிக அனுபவம். பஞ்சபூதங்களின் பங்களிப்போடு தொடர்ந்து யக்ஞகுண்டத்தில் ஆஹூதியளிக்கும் வைதீகர்கள் அதில் ஒன்றிப்போய்விட வேண்டும். அவர்களே ஒரு கட்டத்தில் பஞ்சபூதங்களோடு ஐக்கியமாவதே லட்சியம். செயலே இருப்பின் அடையாளமாக மாறிப்போகும் நிலையில் நமது புலன்களின் எல்லைகளை மீற முடியும் என சித்தர்களும், ஞானிகளும் அவர்களுக்குரிய பாஷைகளில் சொல்லிவருகிறார்கள். இப்படிப்பட்ட அனுபவத்தை ஜொனாதன் லிவிங்ஸ்டோன் எனும் பறவை அடைகிறது. தனது எண்ணத்தைக் கட்டுப்படுத்தி நினைத்த நேரத்தில் நினைத்த இடத்தில் இருக்கும் உடலை நிராகரித்தல் நிலையை அது அடைகிறது.

தூய அத்வைத நிலை என்பது இப்படிப்பட்ட ஒன்றுதான் எனத் தோன்றுகிறது. ரமணர் புற்று நோயின் மிகக் கொடுமையான வலியில் இருந்தபோதும் உடம்பைப் பற்றிய பிரக்ஞையை விலக்கியதன் மூலம் வலியைச் சகித்திருக்க முடிந்தது எனப் படித்திருக்கிறேன். காந்தியும்கூட மயக்க மருந்து எடுத்துக் கொள்ளாமல் அப்பென்டிஸிடிஸ் அறுவை சிகிச்சைக்குத் தன்னை உட்படுத்திக் கொண்டிருக்கிறார். இதெல்லாம்  சாதாரணமானவர்களுக்குச் சாத்தியமல்ல. ஜொனாதனின் குரு சொல்வது போல ஒவ்வொரு பிறவியிலும் நாம் அறிதலில் ஒரு படியைக் கடக்கிறோம். இப்படி ஆயிரக்கணக்கான படிகளைத் தாண்டியபின் அறிந்துகொள்வதை சிலர் சுருக்கமாகவே தெரிந்து கொண்டுவிடுகின்றனர். நமது எல்லைகளை விஸ்தரித்துக்கொண்டு சராசரிகளை ஒதுக்கி இலக்கை நோக்கி பயணிக்கும் ஒவ்வொருவராலும் இதை சாதிக்க முடியும் என ஜொனாதன் லிவிங்ஸ்டோன் உணர்கிறது. தனது நண்பர்களுக்கும் இந்த அறிவை போதிக்கிறது. வேண்டிய நேரத்தில் வேண்டும் இடத்தில் பிரெஞையற்ற வெளியில் ஜொனாதனால் சஞ்சாரிக்க முடிகிறது.

என்னைப் பொருத்தவரை ஆம்னிபஸ் விலங்குகள் வாரத்தில் இடம்பெற்ற ஒவ்வொரு விலங்கும் ஜொனாதன் லிவிங்ஸ்டோன் சீகல்தான். இத்தனை நூற்றாண்டுகளாக மனிதனின் எல்லையற்றை சுயநலத்தை எதிர்த்து நின்றும் சமயத்தில் கட்டாயமாக ஒத்துழைத்தும் தங்களது இருப்பையே தக்கவைக்கப் போராடும் ஒவ்வொரு மிருகமும், பூச்சியும், பறவையும் ஜொனாதனைப் போல போராட்ட குணத்தோடுதான் பிறக்கின்றன. தனிக்காட்டு ராஜாவாக தங்களது இனத்தைத் தொடங்கிய விலங்குகள் இன்று நம்முடன் மைனாரிட்டியாகக் கூட்டு சேர்ந்திருப்பது சோகச் சித்திரம்தான் என்றாலும், ஒரு சமநிலையடைய அவரவர் எல்லையை புரிந்துகொள்ள வேண்டியது அவசியமாகிறது. நமக்கான சாத்தியங்கள் எல்லையற்றது என உணர்ந்த ஜொனாதன் தனது நண்பர்களுக்கு கற்பதின் இன்பத்தைச் சொல்லிக் கொடுத்துக் கொண்டிருப்பதோடு நாவல் முடிகிறது. ஜொனாதன் லிவிஸ்ங்ஸ்டோன் எனும் கடல்புள்ளுவின் மாணவர்களான நாம் இன்றும் கற்றுக்கொண்டிருக்கிறோம்.


Jonathan Livingston Seagull a story
ஆசிரியர் - Richard Bach.
இணையத்தில் படிக்க - பிடிஎப் கோப்பு
Flipkartல் விலை ரூ. 133

2 comments:

  1. நன்றி கிரி..
    சிறப்பான அறிமுகம். இதுவே நான் வாசித்த முதல் ஆங்கில புனைவு. பதின்ம வயதில் அனைத்து தளைகளையும் பிய்த்து எரிந்துவிட்டு ஜோனாதனை போல் சுதந்திர வேட்கையில் அலைந்து திரிய வேண்டும் என்று கனவு கண்டதுண்டு..இன்றும் சில பகுதிகள் அபார மன எழுச்சி தரவல்லது..

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வருகைக்கும் இடுகைக்கும் நன்றி சுநீல்.

      Delete

Related Posts Plugin for WordPress, Blogger...