A.J.Cronin A.K.Ramanujan Amartya Sen Andrea Maria Schenkel Anton Chekhov Arthur Hailey Bill Bryson Deborah Eisenberg dhan gopal mukerji Elizabeth Kostova Gay Neck Geoff Dyer George Orwell Harper Lee Henning Mankell Ian McEwan Jared Diamond Jilly Cooper Jonathan Livingstone Seagull Joseph Heller Kenneth Anderson Kiran Desai mark tully Maugham Michael McCarthy O.Henry okakura kakuzo Orhan Pamuk P.G.Wodehouse PB.ஸ்ரீனிவாஸ் R.K.Narayan Richard Bach Ronald Wilks saggi Stephen King steven weinberg Swami Tejomayananda Upamanyu Chatterjee vikram seth William Sydney porter அ. முத்துலிங்கம் அ.கா.பெருமாள் அகிலன் அசோகமித்திரன் அழகியசிங்கர் அறிஞர் அண்ணா அறுசுவை அரசு நடராஜன் அனார் ஆ. சிதம்பரகுற்றாலம் ஆதவன் ஆர்.கே.நாராயண் ஆர்.ஷண்முகசுந்தரம் ஆஸ்கார் ஒயில்டு இடாலோ கால்வினோ இந்திரா பார்த்தசாரதி இந்துமதி இரா. நாறும்பூநாதன் இரா.நடராசன் இரா.முருகவேள் இரா.முருகன் இலக்கிய வீதி இனியவன் இலவச கொத்தனார் உமா சம்பத் எம் கோபாலகிருஷ்ணன் எம். வி. வெங்கட்ராம் எர்னெஸ்ட் ஹெமிங்வே என்.சொக்கன் என்.ராமதுரை எஸ். ராமகிருஷ்ணன் எஸ்.சந்திரமௌலி ஏ.கே.ராமானுஜன் ஏ.கோபண்ணா ஒல்கா பெரோவ்ஸ்கயா ஃபெயின்மன் க.நா.சு கண்மணி குணசேகரன கரிச்சான் குஞ்சு கலாப்ரியா காப்கா காலபைரவன் கி. ராஜநாராயணன் குமரி எஸ்.நீலகண்டன் குல்தீப் நய்யார் கே நெக் கோபிநாத் கோபுலு சந்திரசேகர சர்மா சமஸ் சல்மான் ரஷ்டி சா. கந்தசாமி சா.பாலுசாமி சாருநிவேதிதா சாலீம் அலி சி.சரவணகார்த்திகேயன் சி.சு.செல்லப்பா சிபி.கே.சாலமன் சு. வேணுகோபால் சுகுமாரன் சுந்தர ராமசாமி சுப்புடு சுவாமி விவேகானந்தர் சுனில் ஜோகி சுஜாதா செல்லம்மா பாரதி செள.ராஜன் சே. இரகுராமன் சோம.வள்ளியப்பன் டாக்டர். சு.முத்து செல்லக்குமார் டாக்டர். பி.எம்.ஹெக்டே டாக்டர்.எல்.மகாதேவன் தமிழ் மகன் தரம்பால் தி. ஜானகிராமன் தி.ஜானகிராமன் தியடோர் பாஸ்கர் து.கணேசன் ந.பிச்சமூர்த்தி நகுலன் நடிகர் சிவகுமார் நமீதா தேவிதயாள் நா.முத்துக்குமார் நாகம்மாள் நாகூர் ரூமி நாஞ்சில் நாடன் ப. சிங்காரம் பல்லவி அய்யர் பவன் வர்மா பவா செல்லதுரை பழ.அதியமான் பழ.கருப்பையா பஷீர் பா.ராகவன் பாம்பே ஜெயஸ்ரீ பாரதியார் பாலகுமாரன் பாலச்சந்திரன் சுள்ளிக்காடு பாலு மகேந்திரா பாவண்ணன் பி.எச்.டேனியல் பி.எம்.சுந்தரம் பி.ஏ.கிருஷ்ணன் பி.வி.ராமஸ்வாமி பிரமிள் பெஞ்சமின் ப்ளாக் பெருமாள் முருகன் பொ.கருணாகரமூர்த்தி மகாகவி பாரதியார் மதன் மருதன் மலர்மன்னன் மனுஷ்யபுத்திரன் மா.கிருஷ்ணன் மார்க்வெஸ் மாஸ்தி மில்லி போலக் முகில் முஹமது யூனுஸ் யதுகிரி அம்மாள் யுவன் சந்திரசேகர் ரகோத்தமன் ரமணி சந்திரன் ரா.கி.ரங்கராஜன் ராஜாஜி லலிதாராம் லா.ச.ரா லிவிங்ஸ்மைல் வித்யா லூசியன் ஸ்ட்ரைக் லெமூர் வ.ரா வண்ணதாசன் வா.மு கோமு வாலி விட்டல் ராவ் விளதீமிர் பகமோலவ் வின்சென்ட் ஷீன் வீயெஸ்வி வுடி ஆலன் வெரியர் எல்வின் வேதவல்லி வைக்கம் முகமது பஷீர் வைணவச் சுடராழி ஆ. எதிராஜன் வைரமுத்து ஜனனி ரமேஷ் ஜான் பான்வில் ஜி.நாகராஜன் ஜிம் கார்பெட் ஜெயகாந்தன் ஜெயமோகன் ஜே. ஹெச். வில்லியம்ஸ் ஜோதிநரசிம்மன் ஷோபா சக்தி ஹென்னிங் மான்கெல்

11 Dec 2012

பாரதியார் கவிதைகள்

சிறப்பு பதிவர் : கணேஷ் வெங்கட்ராமன்

போன வருடம் ஒரு கட்டுரையில் “பாரதி மாயை” என்ற சொற்றொடரை முதல் முறையாகப் படித்தேன். அப்போது பாரதியின் ”மாயையைப் பழித்தல்” என்ற கவிதையின் கீழ்க்கண்ட வரி என் நெஞ்சில் ஓடிற்று :-
“உண்மை யறிந்தவர் உன்னைக் கணிப்பாரோ?”
எனக்கும் பாரதிக்குமிடையிலான உறவு எப்போது தொடங்கியது? கையடக்க ”பாரதியார் கவிதைகள்” புத்தகம் அன்பளிப்பாக கிடைத்தபோதுதான் என்று நினைக்கிறேன். ஏழாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தேன். அப்புத்தகம் கிடைத்தவுடன் நான் புத்தகத்தைப் பிரித்து படித்த முதல் பாடல் என்ன என்று எனக்கு இன்னும் நன்றாக ஞாபகமிருக்கிறது.
“யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழிபோல்
இனிதாவது எங்கும் காணோம்”
எங்கள் வீட்டின் பின்புறம் துணி துவைக்கும் கல் ஒன்று இருந்தது. என் அன்னையார் என்றும் அக்கல்லை துணி துவைக்கப் பயன்படுத்தியது கிடையாது. ஈரமே ஆகாமல், உட்கார ஏதுவாக இருக்கும். வீட்டின் பின்புறம் யாரும் இல்லாதபோது துணி துவைக்கும் கல் ஆசனத்தில் கால்மேல் கால் போட்டுக் கொண்டு ஒரு வித கர்வத்துடன் பாரதியின் கவிதைகளை சத்தம் போட்டு படிப்பது வழக்கமாகி விட்டது.


“எந்தையும் தாயும் மகிழ்ந்து குலாவி
இருந்ததும் இந்நாடே – அதன்
முந்தையர் ஆயிரம் ஆண்டுகள் வாழ்ந்து
முடிந்ததும் இந்நாடே”
என்று ஒரு நாள் பாடிக் கொண்டிருந்தேன். ”என்ன சத்தம் அங்கே?” என்று வீட்டின் பின்புறச் சந்திலிருந்து ஒரு குரல் கேட்டது.

நான், "யாரு கேக்கறது?” என்று கேட்டுவிட்டு என் உரத்த வாசிப்பை சற்று நிறுத்தினேன். கிணற்றுக்குப் பின்னால் உயரமாக வளர்ந்து நிற்கும் தென்னை மரத்தின் கீற்றுகள் அசைந்து இனிமையான ஒலியெழுப்பின.

”பாடம் படிக்கிறிங்களா தம்பீ?” என்று மீண்டும் அந்த குரல்.

பழக்கப்பட்ட குரலாக தெரிந்தது. ஆனால் யாருடைய குரல் என்று என்னால் ஊகிக்க இயலவில்லை. ”இல்லை…பாடம் இல்லை…பாரதி பாடல் படிச்சுக்கிட்டு இருக்கேன்” என்றேன்.

“அப்படியா….” என்று சொல்லி விட்டு அக்குரல் பாடத் துவங்கியது.
“தேடியுனைச் சரணடைந்தேன், தேச முத்து மாரி!
கேடதனை நீக்கிடுவாய், கேட்ட வரந்தருவாய்”
முத்துசாமியின் குரல். எங்கள் காலனியின் தோட்டக்காரன். பின்புறச் சந்தில் இயற்கையின் அழைப்புக்கு பதிலளித்துக் கொண்டிருந்தான். கையில் புகையும் பீடி. வாயில் பாரதி பாட்டு.

ஒருநாள் மாலை எங்கள் வீட்டு முன்புறத் தோட்டத்தில் ”வெற்றி எட்டுத் திக்கும் எட்டக் கொட்டு முரசே” படித்தவாறு அமர்ந்திருந்தேன்.
“ஒற்றைக் குடும்பந் தனிலே – பொருள்
ஓங்க வளர்ப்பவன் தந்தை;
மற்றைக் கருமங்கள் செய்தே – மனை
வாழ்ந்திடச் செய்பவள் அன்னை

ஏவல்கள் செய்பவர் மக்கள் – இவர்
யாவரும் ஓர் குலமன்றோ
மேவி அனைவரும் ஒன்றாய் – நல்ல
வீடு நடத்துதல் கண்டோம்”
ஒரு பந்து வந்து புத்தகம் மீது விழுந்தது. கையடக்கப் புத்தகம் தவறி தரையில் எகிர்ந்தது. அட்டை கழண்டு வந்துவிட்டது. பக்கத்து மாளிகை வீட்டின் தோட்டத்தில் கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்த என் நண்பன் – மணிகண்டன், மதிற்சுவரின் மேலிருந்து எட்டிப் பார்த்து “பாலை எடுத்துக் குடுடா” என்ற ஆணையிட்டான்.

“தர மாட்டேன் போடா!” என்று திரும்பக் கத்தினேன்.

“பால் இன்னும் ஒரு நிமிஷத்துல என் கைக்கு வராட்டி உன் கையில் இருக்கும் புக்கை தூக்கி சாக்கடையில் போட்டு விடுவேன்”

மணிகண்டன் சொன்னதைக் கேட்டவுடன் என் கோபம் எல்லை மீறி பக்கத்து வீட்டுக்கு போனேன். நானும் மணிகண்டனும் ஆக்ரோஷமான சண்டையில் ஈடுபட்டோம். மணிகண்டன் வாயில் “பொன்மொழிகள்” கொப்பளித்தவாறு இருந்தன. நான் அவன் கன்னத்தில் இரண்டு முறை அறைந்து விட்டேன். அவன் என்னை எத்தனை முறை அறைந்தான் என்று நினைவில்லை. மண்ணில் உருண்டு புரண்டோம். மற்ற நண்பர்களுக்கு நல்ல கேளிக்கையாக இருந்தது. மணிகண்டனின் தந்தை வந்து எங்களை விலக்கினார்.

திண்ணையில் கிடந்த பாரதியார் கவிதைகள் புத்தகத்தை எடுத்து கிழிந்து வந்திருந்த அட்டையை ஒட்ட முயற்சித்தேன்.

மணிகண்டன் மட்டுமல்ல, மற்ற பிற நண்பர்களும் என்னைச் சீண்ட நினைக்கும்போது, பாரதியைப் பற்றி ஏதாவது சொல்லி என்னைக் கோபப்படுத்துவார்கள். கோபம் மீறி அழுதும் இருக்கிறேன். அப்படி ஒரு கண்முடித்தனமான பித்து. வளரும் வயதில் சினிமா நடிகர்கள் அல்லது விளையாட்டு வீரர்கள் மேல் இருக்கும் பக்தி மாதிரி. என் சொந்த அண்ணன் ஒரு முறை செய்த சீண்டலில் கேவிக் கேவி அழுது தொண்டை வலி ஏற்பட்ட கதையும் உண்டு. தண்டனையாக என் அண்ணனிடம் பல நாட்கள் பேசாமல் இருந்தேன்.
“உள்ள நிறைவிலோர் கள்ளம் புகுந்திடில்
உள்ளம் நிறைவாமோ? – நன்னெஞ்சே!
தெள்ளிய தேனிலோர் சிறிது நஞ்சையும்
சேர்த்தபின் தேனோமோ? – நன்னெஞ்சே!” 
என் தந்தைக்கு தெரிந்த ஒருவர் இல்லறம் துறந்தவர். கதிர்காமத்தைச் சேர்ந்தவர். எங்கள் ஊரை ஒட்டி ஓடும் காவிரியின் கிளை நதி ஒன்றின் கரையில் குடிசை போட்டு வசித்திருந்தார். அவருடைய குடிலுக்கு ஒரு நாள் என் தந்தையுடன் சென்றிருந்தேன். பாரதியார் கவிதைகள் மேலிருந்த என் காதலைப் பற்றி பெருமையுடன் அவரிடம் என் தந்தை சொன்னார். ”பாரதியார் எழுதியதில் உனக்குப் பிடித்ததொன்றை சொல்” என்று என்னைக் கேட்டார்.
“எண்ணிற் கடங்காமல் எங்கும் பரந்தனவாய்
விண்ணிற் சுடர்கின்ற மீனையெல்லாம் – பண்ணியதோர்
சக்தியே நம்மைச் சமைத்ததுகாண் நூறாண்டு
பக்தியுடன் வாழும் படிக்கு”
”இது என்ன பா என்று தெரியுமா உனக்கு?”

“அதெல்லாம் தெரியாது… ஆனால் இவ்வரிகள் பிடிக்கும்”

“இது வெண்பா. இதை சங்கராபரண ராகத்தில் பாடினால் பொருத்தமாக இருக்கும்” என்று புன்னகைத்தார்.

விடைபெறும்போது சுவாமி சித்பவானந்தரின் கீதை உரைப் புத்தகத்தை எனக்கு பரிசளித்தார் அந்தப் பெரியவர். பள்ளியில் போட்டிகள் எதிலும் பங்கு கொண்டதில்லை. எனவே பரிசு எதுவும் கிடைத்ததில்லை. முதன்முதலில் எனக்குக் கிடைத்த அந்தப் பரிசையும் பாரதி கவிதைதான் பெற்றுத் தந்தது. துரதிர்ஷ்டவசமாக அந்த பரிசுப் புத்தகம் தொலைந்து விட்டது.
“வேத வானில் விளங்கி ‘அறஞ்செய்மின்,
சாதல் நேரினுஞ் சத்தியம் பூணுமின்
தீத கற்றுமின்’ என்று திசையெலாம்
மோத நித்தம் இடித்து முழங்கியே

………………………………………………………………………………… மலர்ச்
செங்கணாய நின் பதமலர் சிந்திப்பாம்”
பாரதியார் கவிதைகள் புத்தகத்தை சதா கையில் சுமந்த வண்ணம் அலைந்து திரிந்த நாட்கள் மறைந்து, பாரதியின் கருத்துகளை மனதில் சுமக்கும் இளைஞனானேன். பாரதியின் பல பாடல்கள் மனப்பாடம். யாராவது பாரதியைப் பற்றி பேசினால் “என் சொந்தக்காரரைப் பற்றி இவர் எப்படி பேசலாம்?” என்பது மாதிரி பாரதியை சொந்தம் கொண்டாடிய தருணங்கள் பல உண்டு.
“வாயினால் சொல்லிடவும் அடங்கா தப்பா;
வரிசையுடன் எழுதிவைக்க வகையும் இல்லை
ஞாயிற்றை சங்கிலியால் அளக்க லாமோ?
ஞானகுரு புகழினை நாம்வகுக்க லாமோ?”
கல்லூரி முடிந்து வேலை செல்லத் துவங்கியபிறகு பாரதியுடனான பிணைப்பு புறவுலகுக்கு அவ்வளவாக தெரியாவண்ணம் வைத்துக் கொண்டேன். மனக்குழப்பம் ஏற்படுகின்ற பொழுதுகளில் மட்டும் பாரதியின் கவிதைகள் மருந்து சாப்பிடுவது போல படிப்பேன். எதிர்காலம் பற்றிய பயம் ஏற்படுகிறபோதெல்லாம், மனந்தளர்வுறும் பொழுதுகளில் எல்லாம், கீழ்க்கண்ட வரிகளை மந்திரம் போல் உச்சரிப்பேன் :-
“சொல் ஒன்று வேண்டும்
தேவ சக்திகளை நம்முளே நிலை பெறச் செய்யும்
சொல் வேண்டும்”
“தெளிவுறவே அறிந்திடுதல் ; தெளிவுதர
மொழிந்திடுதல் ; சிந்திப் பார்க்கே
களிவளர உள்ளத்தில் ஆனந்தக்
கனவுபல காட்டல்; கண்ணீர்த்
துளிவரஉள் ளுருக்குதல், இங்கிவையெல்லாம்
நீ அருளும் தொழில்களன்றோ?”

பேச்சிலராக இருந்த நாட்களில் பாரதி வெறும் புகைப்படமாக நான் தங்கிய அறைகளில் தொங்கிக் கிடந்தார். நெடுநாளாய் பத்திரமாய் வைத்திருந்த கையடக்கப் பிரதி எங்கோ தொலைந்து போனது. இன்னொரு பிரதியெதுவும் வாங்கவில்லை. பாரதியுடனான உறவு உறைந்து போய்விட்டதென்று நினைத்துக் கொண்டிருந்தேன்.




“பாரதி மாயை” என்ற சொற்றொடரை படித்ததும் என்னுள் பழைய நினைவுகள் புத்துயிர் பெற்றன. கட்டுரையாசிரியருக்கு நன்றி செலுத்த வேண்டும். பாரதியின் கவிதைகளில் சில கவிதைகள் மட்டுமே நல்ல கவிதைகள்; மற்றவையெல்லாம் சாதாரணமான கவிதைகள்தாம் என்று அவர் வாதாடினார்.

பாரதியைக் கொண்டாட அவருடைய இலக்கிய அந்தஸ்து முக்கியமில்லை என்ற கொள்கைக்கு வந்துவிட்டவன் நான். சோர்வுற்ற நெஞ்சுக்கு மருந்தளிக்கும் வரிகளைத் தருபவர் மகாகவியா இல்லையா என்பது முக்கியமில்லை. வாழ்வுப் பயணத்தின் வழி நெடுக தன்னுடைய ஜீவவரிகளால் முன்னேறும் உந்துதலைத் தந்து கொண்டிருக்கும் பாரதி, மிகச்சிறந்த கவிஞராக இல்லாது போகட்டும். எனக்கு கவலையில்லை.
“பிழைக்கும் வழி சொல்ல வேண்டுமென்றாலொரு
பேச்சினிலே சொல்லு வான்
உழைக்கும் வழி வினை யாளும்வழிபயன்
உண்ணும் வழியுரைப் பான்
அழைக்கும் பொழுதினிற் போக்குச் சொல்லாமல்
அரைநொடிக் குள்வரு வான்
மழைக்குக் குடை பசி நேரத் துணவென்றான்
வாழ்வினுக் கெங்கள் கண்ணன்”
கடந்த ஒரு வருடத்தில் பாரதியுடனான தொடர்பு புதுப்பிக்கப்பட்டிருக்கிறது.

ஒர் இலக்கிய மன்றத்தில் உரையாடும் வாய்ப்பு முதல்முறையாக எனக்கு கிடைத்தபோது மேடைபயம் வாட்டியது. உரையைத் தொடங்கும்போது பாரதியின் மந்திரம் ஒன்றோடுதான் தொடங்கினேன்.
”பயமெனும் பேய்தனை அடித்தோம் பொய்மைப்
பாம்பைப் பிளந்துயிரைக் குடித்தோம்”
”பாரதி மாயை” விடாது வளர்ந்து வருகிறது. அடுத்த தலைமுறையையும் விடவில்லை. தில்லியில் வசிப்பதால் என் மூத்த மகள் பூஜாவுக்கு பாரதி கவிதை மட்டுமல்ல தமிழே தொலைதூரம்தான். கோடை விடுமுறை ப்ராஜெக்ட் வொர்க்கில் சுதந்திர போராட்ட வீரர் ஒருவரை பாத்திரமாக வைத்து காமிக்ஸ் தயாரிக்க வேண்டியிருந்தது. அவளாகவே ஒருவருடைய துணையுமில்லாமல் தயாரித்த காமிக்ஸின் நாயகனாக வருவது சாக்‌ஷாத் நம்ம தலைப்பா கட்டு பாரதிதான். o
”மந்திரங் கூறுவோம். உண்மையே தெய்வம்
கவலையற்றிருத்தலே வீடு. களியே
அமிழ்தம். பயன்வருஞ் செய்கையே அறமாம்.
அச்சமே நரகம். அதனைச் சுட்டு
நல்லதை நம்பி நல்லதே செய்க”

பாரதியார்  கவிதைகள்,
கையடக்கப்  பிரதி
இணையத்தில் வாங்க  கிழக்கு, உடுமலை 

புகைப்பட  உதவிக்கு நன்றி - nhm


No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...