A.J.Cronin A.K.Ramanujan Amartya Sen Andrea Maria Schenkel Anton Chekhov Arthur Hailey Bill Bryson Deborah Eisenberg dhan gopal mukerji Elizabeth Kostova Gay Neck Geoff Dyer George Orwell Harper Lee Henning Mankell Ian McEwan Jared Diamond Jilly Cooper Jonathan Livingstone Seagull Joseph Heller Kenneth Anderson Kiran Desai mark tully Maugham Michael McCarthy O.Henry okakura kakuzo Orhan Pamuk P.G.Wodehouse PB.ஸ்ரீனிவாஸ் R.K.Narayan Richard Bach Ronald Wilks saggi Stephen King steven weinberg Swami Tejomayananda Upamanyu Chatterjee vikram seth William Sydney porter அ. முத்துலிங்கம் அ.கா.பெருமாள் அகிலன் அசோகமித்திரன் அழகியசிங்கர் அறிஞர் அண்ணா அறுசுவை அரசு நடராஜன் அனார் ஆ. சிதம்பரகுற்றாலம் ஆதவன் ஆர்.கே.நாராயண் ஆர்.ஷண்முகசுந்தரம் ஆஸ்கார் ஒயில்டு இடாலோ கால்வினோ இந்திரா பார்த்தசாரதி இந்துமதி இரா. நாறும்பூநாதன் இரா.நடராசன் இரா.முருகவேள் இரா.முருகன் இலக்கிய வீதி இனியவன் இலவச கொத்தனார் உமா சம்பத் எம் கோபாலகிருஷ்ணன் எம். வி. வெங்கட்ராம் எர்னெஸ்ட் ஹெமிங்வே என்.சொக்கன் என்.ராமதுரை எஸ். ராமகிருஷ்ணன் எஸ்.சந்திரமௌலி ஏ.கே.ராமானுஜன் ஏ.கோபண்ணா ஒல்கா பெரோவ்ஸ்கயா ஃபெயின்மன் க.நா.சு கண்மணி குணசேகரன கரிச்சான் குஞ்சு கலாப்ரியா காப்கா காலபைரவன் கி. ராஜநாராயணன் குமரி எஸ்.நீலகண்டன் குல்தீப் நய்யார் கே நெக் கோபிநாத் கோபுலு சந்திரசேகர சர்மா சமஸ் சல்மான் ரஷ்டி சா. கந்தசாமி சா.பாலுசாமி சாருநிவேதிதா சாலீம் அலி சி.சரவணகார்த்திகேயன் சி.சு.செல்லப்பா சிபி.கே.சாலமன் சு. வேணுகோபால் சுகுமாரன் சுந்தர ராமசாமி சுப்புடு சுவாமி விவேகானந்தர் சுனில் ஜோகி சுஜாதா செல்லம்மா பாரதி செள.ராஜன் சே. இரகுராமன் சோம.வள்ளியப்பன் டாக்டர். சு.முத்து செல்லக்குமார் டாக்டர். பி.எம்.ஹெக்டே டாக்டர்.எல்.மகாதேவன் தமிழ் மகன் தரம்பால் தி. ஜானகிராமன் தி.ஜானகிராமன் தியடோர் பாஸ்கர் து.கணேசன் ந.பிச்சமூர்த்தி நகுலன் நடிகர் சிவகுமார் நமீதா தேவிதயாள் நா.முத்துக்குமார் நாகம்மாள் நாகூர் ரூமி நாஞ்சில் நாடன் ப. சிங்காரம் பல்லவி அய்யர் பவன் வர்மா பவா செல்லதுரை பழ.அதியமான் பழ.கருப்பையா பஷீர் பா.ராகவன் பாம்பே ஜெயஸ்ரீ பாரதியார் பாலகுமாரன் பாலச்சந்திரன் சுள்ளிக்காடு பாலு மகேந்திரா பாவண்ணன் பி.எச்.டேனியல் பி.எம்.சுந்தரம் பி.ஏ.கிருஷ்ணன் பி.வி.ராமஸ்வாமி பிரமிள் பெஞ்சமின் ப்ளாக் பெருமாள் முருகன் பொ.கருணாகரமூர்த்தி மகாகவி பாரதியார் மதன் மருதன் மலர்மன்னன் மனுஷ்யபுத்திரன் மா.கிருஷ்ணன் மார்க்வெஸ் மாஸ்தி மில்லி போலக் முகில் முஹமது யூனுஸ் யதுகிரி அம்மாள் யுவன் சந்திரசேகர் ரகோத்தமன் ரமணி சந்திரன் ரா.கி.ரங்கராஜன் ராஜாஜி லலிதாராம் லா.ச.ரா லிவிங்ஸ்மைல் வித்யா லூசியன் ஸ்ட்ரைக் லெமூர் வ.ரா வண்ணதாசன் வா.மு கோமு வாலி விட்டல் ராவ் விளதீமிர் பகமோலவ் வின்சென்ட் ஷீன் வீயெஸ்வி வுடி ஆலன் வெரியர் எல்வின் வேதவல்லி வைக்கம் முகமது பஷீர் வைணவச் சுடராழி ஆ. எதிராஜன் வைரமுத்து ஜனனி ரமேஷ் ஜான் பான்வில் ஜி.நாகராஜன் ஜிம் கார்பெட் ஜெயகாந்தன் ஜெயமோகன் ஜே. ஹெச். வில்லியம்ஸ் ஜோதிநரசிம்மன் ஷோபா சக்தி ஹென்னிங் மான்கெல்

21 Dec 2012

பாரதிக் கல்வி - ஸ்ரீரங்கம் வி மோகனரங்கன்

பாரதியின் கவிதைகளைப் புரிந்து கொள்ள அவரது கட்டுரைகளை வாசிக்க வேண்டியது அவசியம் என்பதை உணர்த்தும் புத்தகம் ஸ்ரீரங்கம் வி மோகனரங்கனின் பாரதிக் கல்வி. சீனி விஸ்வநாதனின் காலவரிசைப்படுத்தப்பட்ட பாரதி படைப்புகளைப் பிரதானமாகக் கொண்டே மோகனரங்கன் பாரதியின் கவியாளுமை மற்றும் கருத்தாளுமை குறித்த தன் முடிவுகளை நிறுவுகிறார். கவிதைகளைப் போலவே பாரதியின் கட்டுரைகளும் சுவையானவை, அவற்றை வாசிப்பது குறித்து நமக்கு ஏதும் புகார் இருக்க வாய்ப்பில்லை. மோகனரங்கன் எழுதும் விஷயங்கள், கையாளும் மேற்கோள்கள் முதலியவற்றைப் பார்க்கும்போது நமக்கும் சீனி விஸ்வநாதனைப் படிக்க ஆசையாகத்தான் இருக்கிறது, ஆனால் பத்து தொகுதிகள் கொண்ட வரிசை அது என்பதைப் பார்க்கும்போது பாரதியின் மீதுள்ள பிரமிப்புடன் விலை குறித்த கவலையும் சேர்ந்து கொள்கிறது.

பாரதி எழுதிய பாடல்களில் காலத்தைக் கடந்து - அதென்னவோ நமக்கு இப்படி ஒரு பித்து பிடித்திருக்கிறது, சென்னை சென்ட்ரல் ஸ்டேஷன் வரும் ரயில்கள் இவ்வளவு நேரம் என்ற கணக்கு இல்லாமல் பேசின் பிரிட்ஜில் நிற்கிற மாதிரி, இந்த காலம் என்ற இடத்தைக் கடப்பதுதான் இலக்கியத்தில் பெரும்பாடாக இருக்கிறது, இதைக் கடந்து விட்டால் சேர வேண்டிய இடத்தைச் சென்று சேர்ந்து விடலாம் போல -, இலக்கியத்தின் லட்சியமான நித்திய சமகாலத்துவத்தை அடையக்கூடியவை கண்ணன் பாடல்களாகதான் இருக்க முடியும் என்று தோன்றுகிறது. தேச பக்தி, மொழிப் பற்று போன்ற சங்கதிகளெல்லாம் இன்ன தேதிக்கு மேல் இதைப் பயன்படுத்தினால் கெட்டுப் போகும் என்று லேபில் ஒட்டின மாதிரி காலாவதியாகி விடுகின்றன, ஆனால் கண்ணன் பாடல்களில் இருக்கும் காதலும் நேசமும் நன்றியுணர்த்தலும் இன்னபிற மானுட உறவின் தேவ லட்சணங்களும் எந்நாளும் கெட்டுப் போகப் வாய்ப்பில்லை.




"ஆழ்வார் பாடல்களின் மூலம் கண்ணன் என்ற உயிருள்ள விக்கிரகம் பாரதி நெஞ்சில் அமர்ந்து கொள்கிறது," என்று எழுதுகிறார் மோகனரங்கன். ஆழ்வார் பாடல்களை வாசித்த எவரும் இதை மறுக்க முடியாது என்று நினைக்கிறேன். "அறியும் செந்தீயைத் தழுவி அச்சுதன் என்னும் மெய் வேவாள்" என்று நம்மாழ்வார் பாடியதன் எதிரொலியாக "தீக்குள் விரலை வைத்தால், நந்தலாலா, நின்னைத் தீண்டுமின்பம் தோன்றுதடா நந்தலாலா" என்ற பாரதியைப் பார்க்க கற்பனை அதிகம் தேவையில்லை. ஆனால் மோகனரங்கன், நம்மாழ்வாரின் இந்தப் பாசுரத்தை ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கும்போது பாரதி மேற்கொண்ட ஒரு சொற்தேர்வை கவனப்படுத்துகிறார் - "Knowing she embraces red fire, is scorched, and cries, O Deathless".

அன்பின் மிகுதியால் செந்தீ சுடவில்லை என்பதே பாடலாக இருக்க, பாரதி 'is scorched,'  என்று சொல்லக் காரணம் அவரது தர்க்க அறிவே என்று முடிவு செய்கிறார் மோகனரங்கன். இதில் தவறில்லை, இந்தப் பாடலின் கையெழுத்து பிரதி உட்பட வெவ்வேறு பதிப்புகளில் இந்தக் கண்ணியே இல்லை என்னும்போது, தீக்குள் விரலை வைத்தால் என்ற கண்ணியை எழுதியதே பாரதிதானோ என்ற சந்தேகம் வருகிறது என்று அவர் சொல்லும்போது நாம் மோகனரங்கன் பாரதியின் கவிதைகளைப் புரிந்து கொள்ள எந்த அளவுக்கு அவரது உரைநடைகளைச் சார்ந்திருக்கிறார் என்பதை ஒருவாறு அனுமானிக்க முடிகிறது.

தீக்குள் விரலை வைத்தால் என்று அவ்வளவு அழகாக அறியும் செந்தீயைத் தழுவிய நம்மாழ்வாரை உள்வாங்கிய பாரதி, 1910 வரை திருப்பாவையையே அறியாதிருந்தார் என்பது இந்நூலில் கிடைக்கும் ஆச்சரியமான செய்தி. 22.10.1910 அன்று இந்தியா பத்திரிக்கையில் பாரதி எழுதிய தனுர்மாதம் என்ற கட்டுரை இப்படி போகிறது:
"பிறகு அக்கோயிலுக்கு நாமும் சென்றோம். அது மஹிமை விளங்கும் சிறந்ததோர் விஷ்ணு ஆலயம்... அப்போது நூற்றுக்கணக்கான இருகலை வைணவர்கள் அவர்களுக்கென்றே குறிப்பிடப்பட்டது போலிருக்கும் ஒரு இசையில் அநேக பாடல்களைப் பாடினர். எமக்கு வைணவ புத்தகங்களின் பாடல்களில் தேர்ச்சி இல்லை. ஆயினும் அவர்கள் பாடிய பாடல்களில் சில சொற்களை மாத்திரம் நாம் நன்கு ஞாபகத்தில் வைத்துக் கொண்டோம்.... ஒவ்வொரு பாடலும் திருவெம்பாவை போல் 'எம்பாவாய்' என்று முடிகிறது..."
ஜனவரி 1910ல் செய்த இந்தக் கண்டுபிடிப்பையொட்டி அடுத்த மாதம் பாரதி "பாரத மாதா திருப்பள்ளியெழுச்சி" பாடுகிறார். "பாரதியாரின் கவிதை வெளிப்பாடுகளுக்கு அங்குரார்ப்பணமாக ஆயிற்று என்று கொள்ளலாம்" என்று ஜனவரி மாதத்து அறிமுகத்தை மோகனரங்கன் சுட்டுவது ஒரு புதிய புரிதலைத் தருவதாக இருக்கிறது. பாரதியின் உரைநடைகளை வாசிக்காமல் இதை எல்லாம் தெரிந்து கொள்ள வழியில்லை.

இப்புத்தகத்தில் மோகனரங்கன் இன்னொரு முக்கியமான விஷயத்தைச் சொல்கிறார். பாரதியை நினைக்கும்போதெல்லாம் நாம் இதை மறக்கக் கூடாது. "இந்தியா பத்திரிக்கைக்கு கொடுத்து மாற்றிக் கொள்ளும் முறையில் 1909ல் அவருக்கு படிக்க அனுப்பப்பட்ட பத்திரிக்கைகள் தமிழில் 40, தெலுங்கு 1, சமஸ்கிருதம் 2, கன்னடம் 1, ஹிந்தி 6, பெங்காலி 4, உருது 2, பிரஞ்சு 6, இங்கிலீஷ் 33. ஆக, 90 பத்திரிக்கைகளுக்கு மேல் அவருடைய பார்வைக்கு வந்திருக்கின்றன. அந்த 90க்கும் இந்தியா போயிருக்கிறது (காலவரிசைப்படுத்தப்பட்ட பாரதி பாடல்கள் 6, பக்கம் 127)" என்று குறிப்பிடுகிறார் மோகனரங்கன். இந்த தகவல், பாரதி எங்கோ ஒரு ஓரத்தில் இருக்கவில்லை, அன்றைய இந்திய அறிவுச் சூழலின் மையத்தில் இருந்திருக்கிறார் என்பதை உணர்த்துகிறது. பாரதியின் கவிதைகள் வெற்றுக் கற்பனைகள் அல்ல, வெறும் உணர்ச்சிக் குமுறல்கள் அல்ல.
"(1757ம் வருஷம்) பிலாஸி சண்டை முதலாக (1851ம் வருஷம்) வாடர்லூ சண்டை வரை இந்தியாவிலிருந்து பிரிட்டிஷார் கொள்ளையடித்துச் சென்றது நூறு கோடி (1000 000 000) பவுன். அதற்கப்பால் 1875ம் வருஷம் முதல் 1906ம் வருஷம் வரை, குறைந்தபக்ஷம் மற்றொரு நூறு கோடி (1000 000 000) பவுன் பிரதியுபகாரமில்லாமல் வாரிச் சென்றிருக்கிறார்கள். இன்னும் வருஷம்தோறும் இந்தியாவிலிருந்து பிரதிப் பிரயோஜனமில்லாமல் மூன்று கோடி (30 000 000) பவுன் எடுத்துப் போகிறார்கள். இந்தியாவிலேயே அந்நியர்கள் 2 கோடி (20 000 000) பவுன் சம்பளமாக எடுத்துக் கொள்கிறார்கள்... (காலவரிசைப்படுத்தப்பட்ட பாரதி பாடல்கள் 1, பக்கம் 513அ)"
என்று புள்ளிவிவரங்களை அடுக்கும் காப்டன் பாரதிதான்,
பொழுதெல்லாம் எங்கள் செல்வம் கொள்ளை கொண்டு
போகவோ— நாங்கள்  சாகவோ?
அழுது கொண்டிருப்போமோ? ஆண் பிள்ளைகள் நாங்கள்
அல்லமோ- உயிர் வெல்லமோ?

என்று முழங்கும் கவி பாரதி.

"தீவிரமான பாரதி கல்வி என்பது அவருடைய உரைநடை நூல்களை ஒருவன் கற்கத் தொடங்கும்பொழுதே என்பது என் இன்றைய தேற்றம். அந்தக் கல்வி அவருடைய பாடல்களைப் பற்றியதாய் இருப்பினும்கூட என்பதுதான் அதில் விந்தை" என்கிறார் மோகனரங்கன். ஒப்புக் கொள்கிறோம். பாரதியின் கவிதைகளுக்கு அவரது உரைநடை விளக்கம் தருகிறது என்பதையும் உணர்ச்சிகளைக் கொண்டு அவரது கருத்துகளுக்கு பாரதியின் பாடல்கள் அடிக்கோடு இடுகின்றன என்பதையும் ஏற்றுக் கொள்கிறோம்.

ஆனால், மோகனரங்கன் பாரதியின் உரைநடைக்கு கொடுக்கும் முக்கியத்துவத்தில் அவரது கவிதையைக் குறைத்து மதிப்பிடுகிறாரோ என்றும் தோன்றுகிறது. "ஒருவிதத்தில் முடியாததை, ஒரு முறையில் முடியாததை, பல விதங்களில், பல முறைகளில் சாதிக்க முனைவது பாரதியாரின் தேசபக்தி பாடல்கள்" என்று எழுதும்போது, மோகனரங்கன் பாரதியின் பாடல்கள் தேசபக்தி பிரசாரங்கள் என்று மட்டுமே நினைக்கிறார் போல. இங்கு அவரது அழகியல் விழுமியங்கள் செயல்படுகின்றன.

"கவிதை எந்தப் பிரச்சாரத்திற்கும் போகாது, எந்தத் தொண்டும் செய்யாது, கவிதை என்பது மலர் இதழவிழ எங்கும் பரந்து நிரவும் மணம். பாடல் என்பது எங்கோ யாருக்கோ எதையோ தெரிவிக்கப் பதைப்பது..." என்று எழுதும் மோகனரங்கனின் அழகியல் கவிதை குறித்த பாரதியின் அவதானிப்புடன் மாறுபட்ட ஒன்று. அதனால்தான், "எளிய பதங்கள், எளிய நடை, எளிதில் அறிந்து கொள்ளக்கூடிய சந்தம், பொதுஜனங்கள் விரும்பும் மெட்டு இவற்றினையுடைய காவியமொன்று தற்காலத்திலே செய்து தருவோன் நமது தாய்மொழிக்கு புதிய உயிர் தருவோனாகிறான்" என்று சொல்லும் பாரதி தவறாக வழிகாட்டிவிட்டார் என்ற கருத்தை வெளிப்படுத்துகிறார் அவர். இந்தக் கருத்தை இன்னும் மேலே கொண்டு போய்,
"...பாரின்மிசை
நின்றதொரு மின்கொடி போல் நேர்ந்தமணிப் பெண்ணரசின்
மேனி நலத்தினையும் வெட்டினையுங் கட்டினையும்
தேனி லினியாள் திருத்த நிலையினையும்

மற்றவர்க்குச் சொல்ல வசமாமோ?..."
என்ற குயில் பாட்டின் அடிகளை பாரதியின் உச்சகட்ட தோய்வுநிலை என்று சொல்கிறார் மோகனரங்கன். 

"ஏன் மற்றவர்க்குச் சொல்ல வேண்டும்? தனக்குச் சொல்லிக் கொண்டால் போதாதா? அதுதானே கவிதை," என்று கேட்கும் அவருக்கு,  பாரதியின் பாடல்களில் பத்திரிக்கை அலுவலகத்தின் பெரும் சத்தம் கேட்டுக் கொண்டே இருக்கிறது - "வெகு குறைவான இடங்கள்தான் பாரதி தீவிர மௌனத்தில் பேசும் இடங்கள்". இதனாலேயே, குயில் பாட்டின் இறுதியில் உள்ள "ஆன்ற தமிழ்ப் புலர்,கற்பனையே யானாலும்,/ வேதாந்த மாக விரித்துப் பொருளுரைக்க/ யாதானுஞ் சற்றே இடமிருந்தாற் கூறிரோ?" என்ற அடிகளில் பாரதி வெளிப்பட்டு கவிதையைக் கெடுத்து விடுகிறார் என்கிறார் மோகனரங்கன்.

மற்றவர்களுக்குச் சொல்ல வேண்டும் என்ற அவசம் கவிஞனின் தோய்வு நிலை, அவன் தன் உணர்ச்சி வெளிப்பாட்டை உரத்த சந்தங்களைக் கொண்டு நிகழ்த்தும்போது கவிதை தோற்கிறது. "பாடல்களில் ஏந்திவரும் உணர்ச்சியும், இழைந்துவரும் பண்ணும், இணைந்து வரும் சொற்களும் தம்மில் இசைதூக்க, சமயத்தில் கவனச் சிதறலில் முடிவதும் உண்டு" (பக்கம் 24). மோகனரங்கன் மட்டுமல்லாமல் இன்றைய கவிதையின் கோட்பாடாகவும் இது இருக்கிறது. இன்றைக்கு பாரதியே வந்து இன்னொரு குயில் பாட்டு எழுதினாலும் அதை யாரும் புது கவிதையாக ஏற்றுக் கொள்வார்களா என்ன என்பது சந்தேகம்தான். ஆனால் இந்த நகர்வால் தமிழுக்கு இழப்பில்லை என்று சொல்ல முடியாது.

மோகனரங்கன், "மற்றவர்க்குச் சொல்ல வசமாமோ?" என்று நிறுத்திய இடத்தை அடுத்து வரும் சொற்களைத் தொடர்ந்து செல்கிறார் நம் பைராகி.
கற்றவர்க்குச் சொல்வேன் கவிதைக் கனிபிழிந்த
சாற்றினிலே, பண்கூத் தெனுமிவற்றின் சாரமெலாம்
ஏற்றி அதனோடே இன்னமுதைத் தான்கலந்து,
காதல் வெயிலிலே காயவைத்து கட்டியினால்
மாதவளின் மேனி வகுத்தான் பிரமனென்பேன்..."
ரெண்டு அவுன்ஸ் கவிதை கனிபிழிந்த சாறு + பண் + கூத்து + அமுது எனக் கலந்து அதில் காதல் எனும் ஸ்பூனால் கலக்கினால் வருவது குயிலின் மேனி என்கிறார் பாரதி. இயல் இசை நாடகம் எனும் மொழி பண் கூத்தின் சாரத்தை நமது மொழியில் காண்பதைச் சொல்கிறாரோ எனும் சந்தேகம் நமக்கு வருகிறது."

"மீள விழியில் மிதந்த கவிதையெலாம்/ சொல்லில் அகப்படுமோ?" என்ற கேள்வி தனி உரை நிகழ்த்திக் கொள்ளும் கவிஞனுக்கு முக்கியமாக இருக்காது. ஆனால், தன் உணர்வுகளைத் தேக்கி, அதன் தாக்கம் குறையாமல் வெளிப்படுத்தும் கவிதை பாடலாகவே வெளிப்படும் என்று நினைக்கிறேன். கடற்கரையில் தன்னந்தனியனாகப் பாடிய பாரதி யாருக்காகப் பாடினார்? கடலலைகளின் ஆர்ப்பரிப்பின் பூரண மௌனத்தைத் தன் உணர்வுகளால் நிறைத்தார் அவர். இன்று நம் தினசரி வாழ்வில் இசை இல்லை, புறவெளி எங்கும் நாம் ஓசையையே கேட்கிறோம். நம் அகத்தில் ஒரு மௌனவெளியை உருவாக்கிக் கொள்ள வேண்டிய தேவையைச் சொற்களைக் கொண்டு கவிஞர்கள் நிறைவேற்றித் தருகிறார்கள். ஆனால், இதில் ஒரு குறை உள்ளது என்பதை நாம் மறுக்க முடியாது.  பைராகியின் சொற்களில்,
"பாரதிவரை வாழ்ந்த கவிஞர்கள் அனைவரும் தங்கள் கவிதைகளைப் பாட்டாகப் பாடியுள்ளனர். அந்தப் போக்கு அவருக்குப் பின்னர் அறவே நின்றுவிட்டது ஏன்? பண்ணில் கலந்துருகிப் பாடிய கவிகள், கவிதையின் பொருளோடு சொற்களின் வடிவொழுங்கையும் அனுபவித்து இயற்றும் பாங்கினை இயற்கையாகப் பெற்றிருந்தனர். எந்த காலகட்டத்தில் கவிதை என்பது சொற்கள் உணர்த்தும் வெளியாக மட்டும் மாறியது? வண்ணக் காட்சி களையிழந்து கருப்பு வெள்ளையாக மாறியது போல் திடீரென ஏதோ ஒன்று கவிதையில் குறைந்தது போலுள்ளது. குவளையின் குறிப்புகளிலும், யதுகிரி அம்மாளின் குறிப்புகளிலும் பாரதியின் பாட்டுத் திறமை நன்கு வெளிப்படுகிறது. குயில் பாட்டு, கவிதைக் காதல் பாட்டுகளைச் செவிச்சுவை உணராத கவிஞர்கள் எழுதியிருக்க வாய்ப்பு மிகவும் குறைவு. அப்படி ஒரு சந்தச் சுவை கவிதை முழுவதும் விரவியுள்ளது. வியப்பதும், ரசிப்பதும், பகிர்வதும் கவிதை உருவாகும் முறை எனக்கொண்டால், காதலற்றவனின் வெறுமை போல, சந்தச் சுவையற்ற கவிதையில் ஒரு குறை உள்ளது."

"சோலை,குயில்,காதல்,சொன்னகதை யத்தனையும்,/ மாலை யழகின் மயக்கத்தால் உள்ளத்தே/ தோன்றியதோர் கற்பனையின் சூழ்ச்சி"யாகி "விழிதிறந்து பார்க்கையிலே/ சூழ்ந்திருக்கும் பண்மைச் சுவடி,எழுதுகோல்,/ பத்திரிகைக் கூட்டம்,பழம்பாய்-வரிசையெல்லாம்" நிறைந்திருக்கிறது இக்கொடிய நனவுலகில். மோகனரங்கன் சொல்வது தவறென்றோ, பைராகி சொல்வது சரியென்றோ இல்லை. இருவரும் இரு வேறு துருவங்களில் நின்று பேசவில்லை, இருவேறு முகங்களையே தரிசிக்கின்றனர். 

"ஒரு காலத்தையே புரிந்துகொண்டால்தான் ஒருவரைப் புரிந்து கொள்ள முடியும் என்பதும், ஒருவரைப் புரிந்து கொண்டால், ஒரு காலத்தையே புரிந்துகொண்டு விடலாம் என்பதும் பாரதி விஷயத்தில் பொருந்தி வருகிறது,' என்று எழுதுகிறார் மோகனரங்கன். பாரதி போன்ற ஒரு பன்முக ஆளுமையைப் புரிந்து கொள்வது என்பது பல்திசையில் விரியும் காலத்தைப் புரிந்து கொள்வது போன்ற ஒன்று. வேதாந்தம், சைவம், வைணவம், சாக்தம், விவேகானந்தர், அன்னை நிவேதிதா, அரவிந்தர், காந்தி, காலனியம், தேச விடுதலை, சாதி ஒழிப்பு, பெண் விடுதலை, பொது கல்வி  என்று தன் காலத்தின் மாபெரும் ஆளுமைகளையும் சவால்களையும் தன் அறிவு மட்டுமல்லாமல் உணர்வுகளாலும் எதிர்கொண்டு செயல்பட்டவர் பாரதி. அவரது சிந்தனை மற்றும் பாடல்களின் வடிவையும் வெளிப்பாட்டையும் தீர்மானித்த சக்திகளை அடையாளம் காண்பதும், பல்முனைப்பட்ட புறத்தாக்கங்களை உள்வாங்கிக் கொண்டாலும், அவற்றைத் தாண்டி ஓங்கி நிற்கும் பாரதியின் தனித்தன்மை என்ன என்ற புரிதலும் தொடர்ந்து நிகழக்கூடிய விவாதங்களால் மட்டுமே சாத்தியப்படும்.

என்றும் தொடர்வது பாரதிக் கல்வி. ரசனைக் குறிப்புகளாக இல்லாமல், கூர்மையான ஆய்வுப் பார்வையில், கறாரான விமரிசகராக பாரதியை அணுகியிருக்கிறார் மோகனரங்கன். ஒரு விமரிசகரிடம் இதைவிட உயர்ந்த வேறு எதையும் நாம் கேட்பதற்கில்லை.

 பாரதிக் கல்வி,
ஸ்ரீரங்கம்  வி மோகனரங்கன்
தமிழினி, விலை ரூ.80
இணையத்தில் வாங்க - உடுமலை



No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...