A.J.Cronin A.K.Ramanujan Amartya Sen Andrea Maria Schenkel Anton Chekhov Arthur Hailey Bill Bryson Deborah Eisenberg dhan gopal mukerji Elizabeth Kostova Gay Neck Geoff Dyer George Orwell Harper Lee Henning Mankell Ian McEwan Jared Diamond Jilly Cooper Jonathan Livingstone Seagull Joseph Heller Kenneth Anderson Kiran Desai mark tully Maugham Michael McCarthy O.Henry okakura kakuzo Orhan Pamuk P.G.Wodehouse PB.ஸ்ரீனிவாஸ் R.K.Narayan Richard Bach Ronald Wilks saggi Stephen King steven weinberg Swami Tejomayananda Upamanyu Chatterjee vikram seth William Sydney porter அ. முத்துலிங்கம் அ.கா.பெருமாள் அகிலன் அசோகமித்திரன் அழகியசிங்கர் அறிஞர் அண்ணா அறுசுவை அரசு நடராஜன் அனார் ஆ. சிதம்பரகுற்றாலம் ஆதவன் ஆர்.கே.நாராயண் ஆர்.ஷண்முகசுந்தரம் ஆஸ்கார் ஒயில்டு இடாலோ கால்வினோ இந்திரா பார்த்தசாரதி இந்துமதி இரா. நாறும்பூநாதன் இரா.நடராசன் இரா.முருகவேள் இரா.முருகன் இலக்கிய வீதி இனியவன் இலவச கொத்தனார் உமா சம்பத் எம் கோபாலகிருஷ்ணன் எம். வி. வெங்கட்ராம் எர்னெஸ்ட் ஹெமிங்வே என்.சொக்கன் என்.ராமதுரை எஸ். ராமகிருஷ்ணன் எஸ்.சந்திரமௌலி ஏ.கே.ராமானுஜன் ஏ.கோபண்ணா ஒல்கா பெரோவ்ஸ்கயா ஃபெயின்மன் க.நா.சு கண்மணி குணசேகரன கரிச்சான் குஞ்சு கலாப்ரியா காப்கா காலபைரவன் கி. ராஜநாராயணன் குமரி எஸ்.நீலகண்டன் குல்தீப் நய்யார் கே நெக் கோபிநாத் கோபுலு சந்திரசேகர சர்மா சமஸ் சல்மான் ரஷ்டி சா. கந்தசாமி சா.பாலுசாமி சாருநிவேதிதா சாலீம் அலி சி.சரவணகார்த்திகேயன் சி.சு.செல்லப்பா சிபி.கே.சாலமன் சு. வேணுகோபால் சுகுமாரன் சுந்தர ராமசாமி சுப்புடு சுவாமி விவேகானந்தர் சுனில் ஜோகி சுஜாதா செல்லம்மா பாரதி செள.ராஜன் சே. இரகுராமன் சோம.வள்ளியப்பன் டாக்டர். சு.முத்து செல்லக்குமார் டாக்டர். பி.எம்.ஹெக்டே டாக்டர்.எல்.மகாதேவன் தமிழ் மகன் தரம்பால் தி. ஜானகிராமன் தி.ஜானகிராமன் தியடோர் பாஸ்கர் து.கணேசன் ந.பிச்சமூர்த்தி நகுலன் நடிகர் சிவகுமார் நமீதா தேவிதயாள் நா.முத்துக்குமார் நாகம்மாள் நாகூர் ரூமி நாஞ்சில் நாடன் ப. சிங்காரம் பல்லவி அய்யர் பவன் வர்மா பவா செல்லதுரை பழ.அதியமான் பழ.கருப்பையா பஷீர் பா.ராகவன் பாம்பே ஜெயஸ்ரீ பாரதியார் பாலகுமாரன் பாலச்சந்திரன் சுள்ளிக்காடு பாலு மகேந்திரா பாவண்ணன் பி.எச்.டேனியல் பி.எம்.சுந்தரம் பி.ஏ.கிருஷ்ணன் பி.வி.ராமஸ்வாமி பிரமிள் பெஞ்சமின் ப்ளாக் பெருமாள் முருகன் பொ.கருணாகரமூர்த்தி மகாகவி பாரதியார் மதன் மருதன் மலர்மன்னன் மனுஷ்யபுத்திரன் மா.கிருஷ்ணன் மார்க்வெஸ் மாஸ்தி மில்லி போலக் முகில் முஹமது யூனுஸ் யதுகிரி அம்மாள் யுவன் சந்திரசேகர் ரகோத்தமன் ரமணி சந்திரன் ரா.கி.ரங்கராஜன் ராஜாஜி லலிதாராம் லா.ச.ரா லிவிங்ஸ்மைல் வித்யா லூசியன் ஸ்ட்ரைக் லெமூர் வ.ரா வண்ணதாசன் வா.மு கோமு வாலி விட்டல் ராவ் விளதீமிர் பகமோலவ் வின்சென்ட் ஷீன் வீயெஸ்வி வுடி ஆலன் வெரியர் எல்வின் வேதவல்லி வைக்கம் முகமது பஷீர் வைணவச் சுடராழி ஆ. எதிராஜன் வைரமுத்து ஜனனி ரமேஷ் ஜான் பான்வில் ஜி.நாகராஜன் ஜிம் கார்பெட் ஜெயகாந்தன் ஜெயமோகன் ஜே. ஹெச். வில்லியம்ஸ் ஜோதிநரசிம்மன் ஷோபா சக்தி ஹென்னிங் மான்கெல்

5 Aug 2013

தேவதாஸ் - சரத் சந்திர சட்டோபாத்யாயா


“ஓ தேவதாஸ் ..ஓ பார்வதி” என்ற தேவதாஸ் சினிமா பாடல் காதலின்  நினைவுகளை இன்றளவிலும் மீட்டெடுக்கக்கூடியது. தேவதாஸ் என்ற சொல் காதல் தோல்வி, சோகம், துயரம் போன்றவற்றின் குறியீடாக இருக்கிறது. இரண்டு நாள் சவரம் செய்யாத முகத்தில் முளை விட்டிருக்கும் முடியைப் பார்த்தவுடன் என்ன இது “தேவதாஸ்” மாதிரி எனக் கேட்பதை நானே எதிர் கொண்டிருக்கிறேன். தேவதாஸ் சினிமா மீண்டும் மீண்டும் காலத்திற்கேற்ப மாற்றம் செய்யப்பட்டு வெளிவந்து கொண்டிருக்கிறது. காதல் தோல்வியினால் குடிக்கு அடிமையாகி வாழ்க்கையைச் சீரழித்துக் கொள்வது என்று ஒரு மிகையுணர்ச்சித் தன்மையுடன் தேவதாஸ் கதை நம் திரைப்படங்களில் சித்தரிக்கப்படுகிறது. ஆனால் சரத் சந்திரரின் தேவதாஸ் நாவலைப் படிக்கும்போது ஏற்படும் உணர்வும், புரிதலும் வேறு மாதிரி இருக்கிறது.

 

சரத் சந்திரர் தேவதாஸ் நாவலை 1917-ஆம் ஆண்டில் எழுதியுள்ளார். இன்று படிக்கும்போதும் பெரிய அளவிலான மனத்தடைகள் வாசிப்பில் குறுக்கிடுவதில்லை. வாழத் தெரியாத,  தன் எண்ணங்களை அறியாத, தோல்வியுற்ற ஒருவனின் கதைதான் தேவதாஸ். தேவதாசுக்கும், பார்வதிக்குமான சிறு வயது முதலான பழக்கம் பார்வதியின் உணர்வில் காதலாக மலர்கிறது. ஆனால் ஜமீன்தார் குடும்ப அந்தஸ்து தேவதாஸின் பெற்றோர் பார்வதியை மருமகளாக்கிக் கொள்வதைத் தடுக்கிறது. பார்வதிக்கு தேவதாஸின் மீதான அன்பு இறுதி வரை சிறிதளவும் குறைவதில்லை.

பார்வதியின் பாத்திரப் படைப்புதான் இந்த நாவலின் உச்சம். தன் பெற்றோர்களைக் காரணம் காட்டி பார்வதியைத் திருமணம் செய்து கொள்ளாத தேவதாஸின் மறுப்பு பார்வதியின் அன்பில் எந்த மாற்றத்தையும் செய்வதில்லை. காலத்தின் போக்கில் நடைமுறைக்கு ஒத்த, நாற்பதிற்கு சற்று கூடுதலான வயதுடைய ஒரு செல்வந்தருக்கு இரண்டாவது மனைவியாகி வாழ்வை அதன் போக்கில் ஏற்றுக் கொள்கிறாள். தனக்கு அணிவிக்கப்பட்ட அத்தனை நகைகளையும் தன் கணவனின் முதல் மனைவியின் பெண்ணுக்குக் கொடுத்து விடுகிறாள். தன் கணவரின் செல்வத்தை தாராளமாக சந்நியாசிகளை உபசரிப்பது மற்றும் தான தருமம் என் செலவழிக்கிறாள். செல்வம் அனைத்தும் அழிந்து விடும் என கவலைகள் எழுப்பப்படும் சமயம் அதையும் நிறுத்திக் கொள்கிறாள். தாமரை இலை தண்ணீர் போன்ற ஓர் இல்லற வாழ்க்கை.

ஆனாலும் தேவதாஸ் மீதான அன்பு பார்வதியின் மனதில் ஒரு பின்னணி இசையாக ஓடிக் கொண்டேயிருக்கிறது. தன் திருமணத்திற்கு முன் அவள் தேவதாசைச் சந்தித்து காதலை வெளிப்படுத்தும்போதும், பின்பு தேவதாஸ் தவறான நடத்தையால் தன்னை அழித்துக் கொண்டிருப்பதை அறிந்து அவனை சந்திக்கும் போதும் பார்வதியின் எண்ண ஓட்டங்கள் நேர்த்தியாகவும், பண்பட்டதாகவும் அதே சமயம் மிகையில்லா உணர்வுடனும் வெளிப்படுத்தப்பட்டுள்ளன. தான் திருமணத்திற்கு முன் தேவதாசுடன் ஓடிச் செல்லவும் தயார் என பார்வதி கூறுவது அவளது விருப்பத்தைத் தெளிவாக்குகிறது. ஆனால் சமுதாய கட்டுப்பாடு, குடும்பப் பாசம் போன்றவைகளால் கட்டுண்டு வாழ்ந்தாலும், இறுதியில் அத்தனை தளைகளையும் தகர்த்தெறிந்து தேவதாசைக் காண வரும்போது எல்லாம் முடிந்து விடுகிறது. இனி அவள் நிலை என்ன என்ற கேள்வி விடை காண முடியாத ஒன்றாக நம் மனதில் ஓடிக் கொண்டேயிருக்கிறது. அன்பைச் சுமந்தும், ஆசைகளை அழித்துக் கொண்டும் தேவையற்ற தியாகம் செய்து வாழ்ந்த வாழ்க்கைதான் பார்வதியினுடையது.

அடுத்து வரும் பெண் பாத்திரமான சந்திரமுகி ஒரு தேவதாசியாக அறிமுகமாகிறாள். எத்தனையோ ஆண்கள் வந்து சென்று பழக்கமிருந்தாலும், தேவதாஸ் தன்னை முதல் முறை சந்திப்பில் வெறுத்தான் என்பதால் சந்திரமுகிக்கு தேவதாஸ் மேல் ஒரு பற்று உண்டாகிறது. அதனால் அவள் தேவதாஸ் குடிப்பழக்கத்திற்கு அடிமையானாலும் வெறுத்து ஒதுக்குவதில்லை. சந்திரமுகியின் தேவதாஸ் மீதான அபரிமிதமான பாசம், அவளை தான் செய்யும் தொழிலை விட்டு, வேறு ஊர் சென்று வாழச் செய்கிறது. ஆனாலும் தேவதாசை மறக்க முடியாமல் அவனைத் தேடி அவன் ஊர் செல்கிறாள். அவன் கல்கத்தாவில் இருப்பது தெரிந்து அவனைக் கண்டுபிடித்து அவனுக்கு சேவை செய்கிறாள். எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் சந்திரமுகி தேவதாசுக்குச் செய்யும் சேவை தூய்மையான அன்பின் வெளிப்பாடு.

இந்தக் கதையில் வேலைக்காரனாக வரும் தர்மதாஸ் ஜமீனின் மனசாட்சியாக வருகிறான். அந்த ஜமீனின் அழிவைப் பார்க்கிறான். தேவதாஸ் தன்னையே அழித்துக் கொள்வதையும், அவன் துயரையும் கிட்டத்தட்ட இறுதிவரை மிக அருகிலிருந்து பார்க்கிறான். அவன் மனம் பதறுகிறதே தவிர, அவன் ஸ்தானம் அவனை வேறு ஒன்றும் செய்ய அனுமதிப்பதில்லை.

இறுதியாக தேவதாஸின் குறிக்கோளற்ற, தெளிவில்லாத சித்தம் போக்கு சிவம் போக்கு என்ற வாழ்க்கை. தன் உணர்ச்சிகளை வெளிப்படுத்தவோ, தன் தேவைகளைத் தானே அறிந்து கொள்ளவோ முடியாத ஒரு ஜீவன். இந்த நாவலில் சரத் சந்திரர் தேவதாஸ் குறித்துக் கூறுவதையே மேற்கோள் காட்டுவது நல்லது -
“எந்த விஷயத்தைப் பற்றியும் நன்றாக ஆலோசித்துப் பார்க்க இவர்களுக்குப் பொறுமை இருக்காது. எந்த ஒரு பொருள் கையில் கிடைத்தாலும் உடனே அது நல்லது அல்லது கெட்டது என்ற ஒரு தீர்மானத்திற்கு வந்து விடுவார்கள். பரீட்சை செய்து பார்க்க வேண்டும் என்ற சிரமம்கூட எடுத்துக் கொள்ளாமல், இவர்கள் ஒரு குருட்டு நம்பிக்கை என்னும் அஸ்திவாரத்தின் மீது நடப்பார்கள். இப்படிப்பட்ட மனிதர்கள் எல்லாரும் இந்த உலகத்தில் இயங்க மாட்டார்கள் என்பதில்லை. அதிகப்படியாகச் செயல்படுவார்கள். அதிருஷ்டம் கண் மலர்ந்து பார்த்தால் இவர்கள் உயர்நிலை என்ற சிகரத்தின் உச்சியின் மீது நிற்பார்கள். இல்லாவிடில் வீழ்ச்சி என்னும் அதல பாதாளத்தில் வீழ்ந்து கிடப்பார்கள். அதற்குபின் அவர்களால் எழுந்திருக்கவே முடியாது. உட்கார முடியாது. ஒளியைப் பார்க்க முடியாது. சலனமில்லாமல், ஜடமான சதைப் பிண்டம் போல விழுந்து கிடப்பார்கள்.”
சரத் சந்திரர் நடை மிக எளிமையாக உள்ளது. புவன நடராஜன் அவர்களின் மொழிபெயர்ப்பில் காலச்சுவடு பதிப்பகத்தால் வெளியிடப்பட்டுள்ள இந்த நாவலுக்கு அசோகமித்திரன் அவர்களின் முன்னுரை சாலப் பொருத்தமானது. சரத் சந்திரர் ஒரு நல்ல கதைசொல்லியாக இருக்கிறார்.இந்த நாவலின் இறுதிப் பக்கங்கள் மிக அருமையாக வந்துள்ளதாகக் கருதுகிறேன். சினிமாவில் காட்டுவது போல் உச்சக் காட்சி நடக்குதம்மா முதலான மிகைகள் இல்லை. ஒன்று அல்லது இரண்டு இடங்கள் தவிர நாவலில் ஆசிரியக் குரலின் குறுக்கீடு இல்லை. அதற்காக இந்த நாவலில் வேறு குறைகள் இல்லை என்று சொல்ல முடியாது. ஆனால் அவற்றைப் பெரிய அளவில் பொருட்படுத்த தேவையில்லை என நினைக்கிறேன்.

நாவலின் முடிவில் பார்வதியைத் தேடித் போகும் தேவதாஸ் அவள் மாளிகையின் முன் அனாதையாக இறக்கிறான். அவனின் இறுதிப் பயணமும் இலக்கை அடைய முடியாத ஒன்றாகிறது - அவனது பிணம்கூட முழுமையாக எரிக்கப்படுவதில்லை. சரத் சந்திரர் எழுதியுள்ள இறுதி வரிகள் அழகானவை, திரும்பத் திரும்ப ரசித்து வாசித்து யோசித்துப் பார்க்க வைப்பவை:
“அவனுக்கு (தேவதாஸ்) ஏற்பட்ட மரணத்தைப் போல உலகில் இருக்கும் எந்த மனிதனுக்கும் ஏற்பட்டு விடக்கூடாது என்று தெய்வத்திடம் வேண்டிக் கொண்டு பிரார்த்தனை செய்யுங்கள். மரணம் என்பது ஒரு கேடு இல்லை. ஆனால் மரண காலத்தில் ஒரு அன்பு ஸ்பரிசமும், நட்பு, பாசம் நிறைந்த முகமும் கண்ணுக்கு முன்னால் தெரிய வேண்டும். அந்த ஸ்பரிசத்தை உணர்ந்தபடி அதில் நிறைந்து கிடக்கும் அன்பை உணர்ந்தபடி நட்பையும், பாசத்தையும் உணர்ந்து கொண்ட நேரத்தில் ஒரு மனிதனின் வாழ்க்கை முடிய வேண்டும். தனக்காக யாராவது ஒரு சொட்டுக் கண்ணீர் விட்டால், அந்தக் கண்ணீர்த் துளியைப் பார்த்தவாறே அவன் செத்துப் போக வேண்டும்.”

தேவதாஸ், சரத் சந்திர சட்டோபாத்யாயா
தமிழில் - புவனா நடராஜன்
காலச்சுவடு பதிப்பகம்
விலை ரூ.100
இணையத்தில் வாங்க - நூல் உலகம், கிழக்கு

1 comment:

  1. அற்புதமான மதிப்புரை வாழ்த்துக்கள்

    ReplyDelete

Related Posts Plugin for WordPress, Blogger...