A.J.Cronin A.K.Ramanujan Amartya Sen Andrea Maria Schenkel Anton Chekhov Arthur Hailey Bill Bryson Deborah Eisenberg dhan gopal mukerji Elizabeth Kostova Gay Neck Geoff Dyer George Orwell Harper Lee Henning Mankell Ian McEwan Jared Diamond Jilly Cooper Jonathan Livingstone Seagull Joseph Heller Kenneth Anderson Kiran Desai mark tully Maugham Michael McCarthy O.Henry okakura kakuzo Orhan Pamuk P.G.Wodehouse PB.ஸ்ரீனிவாஸ் R.K.Narayan Richard Bach Ronald Wilks saggi Stephen King steven weinberg Swami Tejomayananda Upamanyu Chatterjee vikram seth William Sydney porter அ. முத்துலிங்கம் அ.கா.பெருமாள் அகிலன் அசோகமித்திரன் அழகியசிங்கர் அறிஞர் அண்ணா அறுசுவை அரசு நடராஜன் அனார் ஆ. சிதம்பரகுற்றாலம் ஆதவன் ஆர்.கே.நாராயண் ஆர்.ஷண்முகசுந்தரம் ஆஸ்கார் ஒயில்டு இடாலோ கால்வினோ இந்திரா பார்த்தசாரதி இந்துமதி இரா. நாறும்பூநாதன் இரா.நடராசன் இரா.முருகவேள் இரா.முருகன் இலக்கிய வீதி இனியவன் இலவச கொத்தனார் உமா சம்பத் எம் கோபாலகிருஷ்ணன் எம். வி. வெங்கட்ராம் எர்னெஸ்ட் ஹெமிங்வே என்.சொக்கன் என்.ராமதுரை எஸ். ராமகிருஷ்ணன் எஸ்.சந்திரமௌலி ஏ.கே.ராமானுஜன் ஏ.கோபண்ணா ஒல்கா பெரோவ்ஸ்கயா ஃபெயின்மன் க.நா.சு கண்மணி குணசேகரன கரிச்சான் குஞ்சு கலாப்ரியா காப்கா காலபைரவன் கி. ராஜநாராயணன் குமரி எஸ்.நீலகண்டன் குல்தீப் நய்யார் கே நெக் கோபிநாத் கோபுலு சந்திரசேகர சர்மா சமஸ் சல்மான் ரஷ்டி சா. கந்தசாமி சா.பாலுசாமி சாருநிவேதிதா சாலீம் அலி சி.சரவணகார்த்திகேயன் சி.சு.செல்லப்பா சிபி.கே.சாலமன் சு. வேணுகோபால் சுகுமாரன் சுந்தர ராமசாமி சுப்புடு சுவாமி விவேகானந்தர் சுனில் ஜோகி சுஜாதா செல்லம்மா பாரதி செள.ராஜன் சே. இரகுராமன் சோம.வள்ளியப்பன் டாக்டர். சு.முத்து செல்லக்குமார் டாக்டர். பி.எம்.ஹெக்டே டாக்டர்.எல்.மகாதேவன் தமிழ் மகன் தரம்பால் தி. ஜானகிராமன் தி.ஜானகிராமன் தியடோர் பாஸ்கர் து.கணேசன் ந.பிச்சமூர்த்தி நகுலன் நடிகர் சிவகுமார் நமீதா தேவிதயாள் நா.முத்துக்குமார் நாகம்மாள் நாகூர் ரூமி நாஞ்சில் நாடன் ப. சிங்காரம் பல்லவி அய்யர் பவன் வர்மா பவா செல்லதுரை பழ.அதியமான் பழ.கருப்பையா பஷீர் பா.ராகவன் பாம்பே ஜெயஸ்ரீ பாரதியார் பாலகுமாரன் பாலச்சந்திரன் சுள்ளிக்காடு பாலு மகேந்திரா பாவண்ணன் பி.எச்.டேனியல் பி.எம்.சுந்தரம் பி.ஏ.கிருஷ்ணன் பி.வி.ராமஸ்வாமி பிரமிள் பெஞ்சமின் ப்ளாக் பெருமாள் முருகன் பொ.கருணாகரமூர்த்தி மகாகவி பாரதியார் மதன் மருதன் மலர்மன்னன் மனுஷ்யபுத்திரன் மா.கிருஷ்ணன் மார்க்வெஸ் மாஸ்தி மில்லி போலக் முகில் முஹமது யூனுஸ் யதுகிரி அம்மாள் யுவன் சந்திரசேகர் ரகோத்தமன் ரமணி சந்திரன் ரா.கி.ரங்கராஜன் ராஜாஜி லலிதாராம் லா.ச.ரா லிவிங்ஸ்மைல் வித்யா லூசியன் ஸ்ட்ரைக் லெமூர் வ.ரா வண்ணதாசன் வா.மு கோமு வாலி விட்டல் ராவ் விளதீமிர் பகமோலவ் வின்சென்ட் ஷீன் வீயெஸ்வி வுடி ஆலன் வெரியர் எல்வின் வேதவல்லி வைக்கம் முகமது பஷீர் வைணவச் சுடராழி ஆ. எதிராஜன் வைரமுத்து ஜனனி ரமேஷ் ஜான் பான்வில் ஜி.நாகராஜன் ஜிம் கார்பெட் ஜெயகாந்தன் ஜெயமோகன் ஜே. ஹெச். வில்லியம்ஸ் ஜோதிநரசிம்மன் ஷோபா சக்தி ஹென்னிங் மான்கெல்

20 Aug 2013

காஷ்மீர்: சீற்றம் பொதிந்த பார்வை - அருந்ததி ராய்

குறிப்பு: காலச்சுவடின் புதிய வெளியீடான அருந்ததி ராயின் ‘காஷ்மீர்: சீற்றம் பொதிந்த பார்வை’ என்னும் நூலின் முன்னுரை. பதிப்பகத்தார் மூலம் ஆம்னிபஸ் தளத்தில் வெளியிடப்பட்டிருக்கிறது.


காஷ்மீர் என்னும் பிரச்சினை என்றென்றும் நம்மிடம் உண்டு. காஷ்மீர் தொடர்பாக இந்தியாவில் காணப்படும் கருத்தொருமை கடும்பிடிவாதமே. ஊடகத் துறை, ஆட்சித்துறை, உளவுத்துறை, இந்தித் திரையுலகம் உட்பட இந்திய ஆதிக்கத் தரப்புகள் அனைத்தையும் ஊடறுத்து நிலவும் கடும்பிடிவாதம் இது. 

காஷ்மீர் பள்ளத்தாக்கில் ஏறத்தாழ 20 ஆண்டுகளாகப் போர் நிகழ்ந்துவருகிறது. அதற்கு 70,000 பேர் பலியாகியுள்ளார்கள். பல்லாயிரக்கணக்கானோர் அங்குச் சித்திரவதை செய்யப்பட்டு, ‘காணாமல் போக்கடிக்கப்பட்டுள்ளார்கள்.’ பல்லாயிரக்கணக்கான பெண்கள் வல்லுறவுக்கு உள்ளாகியிருக்கிறார்கள்; விதவைகளாக்கப்பட்டிருக்கிறார்கள். காஷ்மீர் பள்ளத்தாக்கில் இந்தியப் படையினர் 5 லட்சம் பேர் காவல் புரிகிறார்கள். உலகிலேயே மிகப்பெரிய படைமயப்பட்ட பகுதி காஷ்மீரே. (அமெரிக்கப் படையினர் ஈராக்கில் நிலைகொண்டிருந்தபோது அவர்களின் ஆகக்கூடிய எண்ணிக்கை 1,65,000.) காஷ்மீர் தீவிரவாதத்தைத் தாங்கள் பெரிதும் அடக்கிவிட்டதாக இந்தியப் படையினர் இப்போது வலியுறுத்துகின்றனர். அது உண்மையாக இருக்கலாம். ஆனாலும் படைபல ஆதிக்கம் வெற்றி ஆகுமா?

தன்னை ஜனநாயக அரசு என்று வலியுறுத்தும் அரசு, படைபல ஆதிக்கத்தை எவ்வாறு நியாயப்படுத்துகிறது? ஆம், ஒழுங்காகத் தேர்தல்களை நடத்தி! காஷ்மீரில் தேர்தல்களுக்கு நீண்ட சுவாரசியமான வரலாறு உண்டு. எனினும் 1987இல் காஷ்மீர் மாநிலத் தேர்தலில் அப்பட்டமான மோசடி நடந்தேறியது. 1990இல் அங்கு ஆயுதக் கிளர்ச்சி ஏற்பட்டதற்கு அதுவே உடனடிக் காரணம். அதன் பின்னர் தேர்தல் என்பது ராணுவ ஆக்கிரமிப்பின் கருவியாகவும் இந்திய ரகசிய அரசின் தீய விளையாட்டுக்களமாகவும் மாறியுள்ளது. உளவுப்படையினரே அங்கு அரசியல் கட்சிகளைத் தோற்றுவித்து பொம்மை அரசியல்வாதிகளை உருவாக்கி வருகிறார்கள். தங்கள் விருப்பப்படி அரசியல் தலைவர்களை அவர்கள் ஆக்கியும் அழித்தும் வருகிறார்கள். வேறெவரையும்விட உளவுப்படையினரே ஒவ்வொரு தேர்தலின் விளைவுகளையும் முன்கூட்டியே நிர்ணயிக்கிறார்கள். ஒவ்வொரு தேர்தலின் முடிவிலும் காஷ்மீர் மக்களின் ஒப்புதலை இந்தியா பெற்றுள்ளதென இந்திய ஆதிக்கத் தரப்பினர் முழங்கி வருகிறார்கள். 

2008 கோடையில் அமர்நாத் கோயில் சபைக்கு நிலம் ஒதுக்கிய சர்ச்சை பெரிய அகிம்சைப் போராட்டமாக வளர்ந்தது. அன்றாடம் பல்லாயிரக்கணக்கானோர் படையினரையும் காவல்துறையினரையும் மீறித் தெருக்களில் திரண்டார்கள். கூட்டத்தினரிடையே துப்பாக்கிச் சூடு நடத்திய ஆயுதப்படையினர் பலரைக் கொன்றார்கள். எனினும் வைகறை முதல் நள்ளிரவு வரை ‘அஸாதி! அஸாதி!’ (‘சுதந்திரம்! சுதந்திரம்!’) என்ற முழக்கம் நகரெங்கும் எதிரொலித்தது. கடைக்காரர்கள், மருத்துவர்கள், படகுவீட்டுச் சொந்தக்காரர்கள், வழிகாட்டிகள், நெசவாளர்கள், கம்பளி வியாபாரிகள் அனைவரும் அறைகூவல் அட்டைகள் ஏந்தி ‘அஸாதி! அஸாதி!’ என்று தெருக்களில் முழங்கினார்கள். போராட்டம் பல நாட்கள் தொடர்ந்தது. 

மேற்படி பெரிய, ஜனநாயக, அகிம்சைப் போராட்டத்தால் முதல் தடவையாக இந்தியப் பொதுசன அபிப்பிராயத்தில் பிளவுகள் தோன்றவே இந்திய அரசு பீதியடைந்தது. காஷ்மீர் குடிமக்களின் அடிபணியாமை இயக்கத்தை எதிர்கொள்ளும் விதத்தை உறுதிபடத் தீர்மானிக்காமல், போராட்டத்தை அடக்கும்படி அது உத்தரவிட்டது. அண்மைக் காலத்தில் நடைமுறைப்படுத்தப்படாத மிகவும் கொடூரமான ஊரடங்குச் சட்டத்தை நடைமுறைப்படுத்தி, கண்டவுடன் சுடவும் அது கட்டளையிட்டது. தொடர்ந்து பல நாட்களாக நடைமுறையில் இருந்த ஊரடங்குச் சட்டம் லட்சக்கணக்கானோரைக் கூண்டிலடைத்தது. சுதந்திர வேட்கை கொண்ட பெருந்தலைவர்கள் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டார்கள். மற்றும் பலர் சிறையில் அடைக்கப்பட்டார்கள். வீட்டுக்கு வீடு தேடுதல் நடத்தி நூற்றுக்கணக்கானோர் கைதுசெய்யப்பட்டார்கள். முன்னெப்போதும் இல்லாதவாறு தொடர்ந்து 7 வாரங்களுக்கு வெள்ளிக்கிழமைத் தொழுகை நடைபெறாத வகையில் ஜும்மா மசூதி மூடப்பட்டது. 

போராட்டம் ஒடுக்கப்பட்டதும் ஓர் அசாதாரணமான நடவடிக்கையாக, காஷ்மீர் மாநிலத்தில் தேர்தல் நடத்துவது பற்றி அரசாங்கம் அறிவித்தது. தேர்தலைப் புறக்கணிக்கும்படி சுதந்திர வேட்கை கொண்ட தலைவர்கள் கோரிக்கை விடுத்தார்கள். அவர்கள் திரும்பவும் கைதுசெய்யப்பட்டார்கள். தேர்தல் முடிவுகள் இந்திய அரசாங்கத்துக்கு மாபெரும் தர்ம சங்கடத்தை ஏற்படுத்தும் என்று அநேகமாக அனைவருமே நம்பினார்கள். இந்திய பாதுகாப்புத் தரப்பினரைச் சித்தபிரமை பீடித்துக்கொண்டது. பின்னிப்பிணைந்த உளவாளிகள், கட்சிமாறிகள், படையினருடன் இணைந்த செய்தியாளர்கள் அனைவரும் புதிதாக வரிந்துகட்டி வேலைசெய்தார்கள். எந்த ஒரு விஷயத்திலும் பராமுகம் காட்டப்படவில்லை. (அங்கு நடக்கும் எந்த விஷயத்திலும் சம்பந்தப்படாத என்னைக்கூட ஸ்ரீநகரில் இரண்டு நாட்கள் வீட்டுக் காவலில் வைத்தார்கள்.) 

தேர்தல் நடத்தும் அறிவிப்பு ஒரு மாபெரும் சூதாட்டமே. எனினும் அதில் வெற்றியே கிடைத்தது. மக்கள் திரண்டுவந்து வாக்களித்தார்கள். ஆயுதப் போராட்டம் ஆரம்பித்த பின்னர் இடம்பெற்ற மிகப்பெரிய வாக்களிப்பு அது. முதலில் காஷ்மீர் பள்ளத்தாக்கிலேயே மிகவும் படைமயமான மாவட்டங்களில் வாக்களிப்பு இடம்பெறும் வண்ணம் தேர்தல் அட்டவணை தயாரிக்கப்பட்டது சூதாட்ட வெற்றிக்கு உதவியது. 

ஒரு சில வாரங்களுக்கு முன்னர் துப்பாக்கி குண்டுகள், கண்டதும் சுடும் உத்தரவுகள் உட்பட அனைத்தையும் எதிர் கொண்ட அதே மக்கள் இப்போது விரைவாகத் தங்கள் மனத்தை ஏன் மாற்றிக்கொண்டார்கள் எனக் கேட்பதில் இந்திய ஆய்வாளர், செய்தியாளர், உளவியலாளர் எவருமே அக்கறை கொள்ளவில்லை. ஆண்டு முழுவதும் ஏராளமான படையினர் குவிக்கப்பட்ட சூழ்நிலையில் (20 பேருக்கு 1 வீரர் எனக் குவிக்கப்பட்ட சூழ்நிலையில்) நடந்த தேர்தல் என்பதைப் பொருட்படுத்தாமல் மெத்தப் படித்த அறிவுஜீவிகள் அந்த மகத்தான ஜனநாயக விழாவைப் போற்றிப் புகழ்ந்து பேசினார்கள். இந்திய நாட்டுக்குள் தேர்தல் நடக்கும்போது தொலைக்காட்சி அரங்கங்களில் குடியிருந்து ஒவ்வோர் ஆரூடத்தையும் வாக்களித்தோர் வாய்ப்பிறப்பையும் வாக்களிப்பில் புலப்படும் சின்னஞ்சிறு ஏற்றத் தாழ்வுகளையும் பிய்த்துப்பிடுங்கும் அறிவுஜீவிகள் தேர்தல் என்றால் என்ன என்பது பற்றிப் பேசினார்கள். முன்னெப்போதும் காஷ்மீர் பள்ளத்தாக்கில் இயங்காத அரசியல் கட்சியின் பிரதிநிதிகளென்று சொல்லிக்கொண்டு வேட்பாளர்கள் நூற்றுக்கணக்கானோர் எங்கிருந்தோ புறப்பட்டுவந்த புதிரை எவருமே கருத்தில் கொள்ளவில்லை. அவர்கள் எங்கிருந்து வந்தார்கள்? அவர்களுக்குப் பொருளுதவி செய்தது யார்? எவருமே கேட்கவில்லை! 

ஊரடங்குச் சட்டம், கும்பல் கைது நடவடிக்கைகள், வாக்களிப்பு நடைபெறவிருந்த தேர்தல் தொகுதிகளைத் தனிமைப்படுத்தியது ஆகியவை பற்றி எவருமே பேசவில்லை. வழக்கத்துக்கு மாறாக பிரசாரம் செய்த அரசியல்வாதிகள், ‘அஸாதி’, காஷ்மீர் பிரச்சினை போன்றவற்றைத் தேர்தலிருந்து பிரித்து, தெருக்கள், தண்ணீர், மின்சாரம் போன்ற மாநகராட்சி அலுவல்கள் பற்றிய தேர்தல் இது என்று வலியுறுத்தியது குறித்து அநேகமானோர் பேசவில்லை. பல பத்தாண்டுகளாகப் படையினருக்குக் கட்டுப்பட்டு வாழ்ந்த மக்கள் - பகலோ இரவோ, எந்த வேளையிலும் படையினர் வீடுகளுக்குள் புகுந்து, மக்களைப் பிடித்துச்செல்லும் மாநிலத்தில் வாழ்ந்த மக்கள் - தாங்கள் சொல்வதைக் கேட்கும், தங்களுக்காக வாதாடும், தங்கள் பிரதிநிதியாக விளங்கும் எவரையும் ஏன் தேர்ந்தெடுக்கவில்லை என்று எவருமே கேட்கவில்லை.

தேர்தல் முடிவடைந்த அடுத்த நிமிடம், மீண்டும் (இந்தியாவுக்கே) வெற்றி என்று இந்திய ஆதிக்கத்தரப்பும், பிரதான ஊடகங்களும் முழக்கமிட்டன. தாங்கள் சற்று இரக்கத்துக்குரிய மக்கள் என்று - எதைப் பெற்றுக்கொள்ள அருகதையுடையவர்களோ அதைப் பெற்றுக்கொண்ட இரக்கத்துக்குரிய மக்கள் என்று - தங்களை ஆள்வோர் தங்களைப் பற்றிக்கொண்டுள்ள கண்ணோட்டத்தை காஷ்மீர் மக்கள் ஒப்புவிக்கத் தொடங்கினார்கள். அது மேற்படி தேர்தலால் உண்டான தகாத விளைவு. மிகவும் கவலையளிக்கும் பக்கவிளைவு. ‘என்றுமே காஷ்மீரியரை நம்பாதீர். எங்கள் உள்ளம் நிலையானதல்ல. நாங்கள் நம்பத்தகுந்தவர்கள் அல்ல’ என்று காஷ்மீரியர்கள் பலர் என்னிடம் தெரிவித்தார்கள். காஷ்மீரில் உத்தியோகபூர்வமான கொள்கையை நடைமுறைப்படுத்துவதில் உளவியல் போர் ஒரு கருவியாகப் பயன்படுத்தப்படுகிறது. பல பத்தாண்டுகளாக நிகழ்த்தப்பட்டு வரும் இக்கொடுமையை - மக்களின் தன்மானத்தை அழிக்கும் முயற்சியை - ராணுவ ஆதிக்கத்தின் படுமோசமான அம்சமென்று வாதிட இடமுண்டு. 

தேர்தல் முடிந்து ஒருசில வாரங்களுக்குள் பழைய நிலைமை திரும்பியது. ஆர்ப்பாட்டங்கள், 'அஸாதி’ கோரிக்கைகள். படையினரின் நீதிவிசாரணையற்ற கொலைகள் மறுபடியும் மேலோங்கின. தீவிரவாதம் ஓங்கிவருவதாகச் செய்தித்தாள்கள் தெரிவிக்கின்றன. அடுத்தடுத்த தேர்தல்களில் வாக்களித்தோரின் எண்ணிக்கை குறைந்தது குறித்து கருத்துகள் அதிகம் வெளிவராததில் வியப்பில்லை. 

தேர்தலுக்கும் ஜனநாயகத்துக்கும் இடையே ஏதாவது தொடர்புண்டா என்று நீங்கள் வியப்பதற்கு இது போதும். 

ஆயுதங்கள் குவிந்து, குழப்பத்தில் வழுக்கிவிழும் பிளவுப் பாதையில் காஷ்மீர் அமைந்திருப்பதே பிரச்சினைக்கான காரணம். தெள்ளத்தெளிவான சுதந்திர உணர்வும் மங்கலான புறவடிவமும் கொண்ட காஷ்மீர் சுதந்திரப் போராட்டம், பற்பல ஆபத்தான, முரண்பட்ட சித்தாந்தச் சுழிகளுக்குள் அகப்பட்டுள்ளது: இந்திய தேசியவாதம் (கார்ப்பொரேட் நிறுவன தேசியவாதம், ‘இந்து’ தேசியவாதம் இரண்டும் இணைந்த ஏகாதிபத்தியம்.) பாகிஸ்தானிய தேசியவாதம் (அதன் முரண்பாடுகளின் சுமையின்கீழ் நொறுங்கி வருவது), அமெரிக்க ஏகாதிபத்தியம் (துஞ்சும் பொருளாதாரம் கண்டு பொறுமையிழந்து வருவது), புத்தெழுச்சியுறும் இஸ்லாமிய தலிபான் (மனம் பிறழ்ந்த கொடுஞ்செயல்களில் ஈடுபட்டாலும் படைபல ஆதிக்கத்தை எதிர்த்துநிற்பதால், மென்மேலும் அங்கீகாரம் பெற்றுவருவது). இச்சித்தாந்தங்கள் அனைத்தும் இனப்படுகொலை முதல் அணுவாயுதப் போர் வரை எக்கொடுமையும் புரியவல்லவை. இவற்றுடன் சீன ஏகாதிபத்திய வேட்கையையும் ஆக்கிரமிக்கும் போக்குடன் மறுபிறவியெடுக்கும் ரஷ்யாவையும் கஸ்பியன் பகுதியில் காணப்படும் பெரிய இயற்கைவாயுப் படிவையும், காஷ்மீரிலும் லடாக்கிலும் இயற்கை வாயு, எண்ணெய்ப் படிவுகள் காணப்படுவதாக இடைவிடாது கேட்கும் முணுமுணுப்புகளையும் சேர்த்தால், வல்லரசுகளுக்கிடையே புதியதொரு பனிப் போர் (Cold War)மூள்வதற்கான வழிமுறைகள் கைவசம் கிடைக்கும். 

இவை அனைத்துக்கும் இடையே ஆப்கானிஸ்தானிலும் பாகிஸ்தானிலும் அதிகரிக்கும் வன்முறைச் செயலை இந்தியாவுக்குள் செலுத்தும் கால்வாயாக விளங்க காஷ்மீர் தயாராக இருக்கிறது. இந்தியாவில் கொடுமைப்படுத்தப்பட்டு, அவமானப்படுத்தப்பட்டு, ஓரங்கட்டப்பட்ட 15 கோடி முஸ்லிம் மக்களிடையே வெகுண்டெழும் இளைஞர்கள் அதைப் பயன்படுத்திக் கொள்வார்கள். 2008ஆம் ஆண்டு மும்பைத் தாக்குதலில் உச்சமடைந்த தொடர்ச்சியான பயங்கரவாத தாக்குதல்கள் அதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளன. 

உலகிலேயே மிகவும் பழைய, மிகவும் சிக்கலான பிரச்சினைகளுள் பாலஸ்தீனப் பிரச்சினையைப் போலவே காஷ்மீர் பிரச்சினையும் ஒன்று. அது தீர்க்க முடியாத பிரச்சினை என்பதல்ல அதன் அர்த்தம். தீர்வு எந்த ஒரு தரப்புக்கும் எந்த ஒரு நாட்டுக்கும் எந்த ஒரு சித்தாந்தத்துக்கும் முற்றிலும் நிறைவு தராது என்பதே அதன் அர்த்தம். ஆகவே கட்சி நிலைபாடுகளைக் கடந்த பேச்சுவார்த்தைகளை ஏற்பாடுசெய்ய வேண்டியிருக்கும். ஆனால், அப்படி ஒரு பிரச்சினை உண்டு என்பதை இந்திய அரசாங்கம் ஏற்றுக்கொள்ளும் கட்டத்தையே நாம் இன்னும் அடையவில்லை. ஆகவே பிரச்சினையைப் பேசித் தீர்க்கும் யோசனையை அது ஏற்றுக்கொள்ளுமென்ற பேச்சுக்கே இப்போது இடமில்லை. பேசித்தீர்க்க வேண்டிய நிர்ப்பந்தம் தற்போது இந்தியாவுக்கு இல்லை. அதன் இருப்புகள் உலகளாவி ஓங்கி வருகின்றன. அதன் பொருளாதாரம் நடைபயின்று வருகிறது. அதன் அயல்நாடுகள் குருதிவெள்ளத்துடனும், உள்நாட்டுப் போருடனும், வதைமுகாம்களுடனும், அகதிகளுடனும், படைக்கலகங்களுடனும் மல்லாடி வருகையில், இந்தியா கண்ணுக்கினிய தேர்தல் ஒன்றை நடத்தி முடித்துள்ளது. 

எனினும் ‘பைத்தியக்காரப் பேய்த்தனம்’ (Demon-Crazy) கொண்டு எல்லோரையும் எல்லா வேளைகளிலும் ஏமாற்ற முடியாது. காஷ்மீரில் நிலவும் குழப்பத்துக்குத் துப்பாக்கிச் சூட்டு வேகத்தில் இந்தியா காணும் தற்காலிகத் தீர்வுகள் பிரச்சினையைப் பெருக்கி, மண்ணுக்குள் புதைத்துள்ளன. புதையுண்ட பிரச்சினை நிலத்தடி நீருக்கு நஞ்சூட்டி வருகிறது.

அருந்ததி ராய்

தலைப்பு: காஷ்மீர்: சீற்றம் பொதிந்த பார்வை
ஆசிரியர் : அருந்ததி ராய்
தமிழில் : மணி வேலுப்பிள்ளை
விலை: ரூ 100/-

No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...